எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 05, 2019

வல்லாளர் மறைவு!குலசேகரனும் மறைந்தான்!

குலசேகரன் விழும் முன்னரே ஹொய்சளப் படை நிர்மூலம் ஆக்கப்பட்டது. ஹொய்சளப் படையின் தளபதிகளும் தண்டநாயகர்களும் சுல்தானியரால் கொல்லப்பட்டார்கள். வீர வல்லாளர் மட்டும் தப்பி இருந்தார். அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் போர்க்களத்தில் ஈடு கொடுத்தார். ஆனால் தன் சொந்தப் படை வீரர்களே உயிருக்குப் பயந்து களத்தை விட்டு ஓடுவது கண்டு செய்வதறியாது திகைத்தார். எதிரிகள் அவரையும் துரத்த ஆரம்பிக்கவே தன் குதிரை மீது ஏறிக் களத்தை விட்டு ஓட ஆரம்பித்தார். அவருடைய மெய்க்காப்பாளர்கள் அனைவரும் போரில் மாண்டு விட்டனர். யாருடைய உதவியும் இல்லாமல் தனித்தே தன்னைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தார். ஆனால் ஓடும் அவரைக் கண்ட சுல்தானியர்கள் அவரைத் துரத்த ஆரம்பித்தனர்.

கியாசுதீனின் மருமகன் ஆன நாசிருதீன் அவரைப் பிடித்து விட்டான். ஆனால் அவர் தான் ஹொய்சள மன்னர் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவரைக் கொல்ல முயற்சித்தான். அப்போது நாசிருதீனின் வீரர்களில் ஒருவன் இவர் தான் ஹொய்சள அரசர் எனக் கூறவே அவரைக் கொல்லாமல் நிறுத்திவிட்டு அவரைச் சிறைப்படுத்தித் தன்னுடன் அழைத்துச் சென்றான். மதுரையில் கியாசுதீன் முன்னால் அவரை நிறுத்தினான்.இவ்வளவு வருடங்கள் எத்தனை எத்தனையோ போர்க்களங்களில் வெற்றி பெற்று மாபெரும் பெயரோடும் புகழோடும் திகழ்ந்த வீர வல்லாளர் இப்போது சுல்தானின் முன்னால் நிராயுதபாணியாகத்தலை குனிந்து நின்றார். ஆனாலும் அவர் வீரம் குறையவில்லை. ஹொய்சள மன்னர் என அறிந்த கியாசுதீன் அவருக்கு ஆசனம் அளித்து அமரச் செய்து அவரைத் தாங்கள் நல்ல முறையில் நடத்தப் போவதாகவும், ஆகவே கியாசுதீன் கேட்பதை எல்லாம் அவர் தர வேண்டும் எனவும் சொன்னான். அதன்படியே மன்னர் ஒத்துக் கொள்ள, அவருடைய குதிரைப்படைகள், யானைப்படைகள், சொத்துக்கள் என அனைத்தையும் கியாசுதீனுக்குத் தருவதாக ஒத்துக் கொண்டு சாசனம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் மன்னர்.

அரசரின் படைகளிடம் இதைக் காட்டி அனைத்தையும் பெற்றுக்கொண்டு வரும்படி சில வீரர்களை அனுப்பி வைத்த சுல்தான் கண்களைக் காட்ட வீர வல்லாளர் இரு கண்களும் கட்டப்பட்டு வெளியே வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டார். அதை வல்லாளர் ஆக்ஷேபிக்கவே கண் கட்டுகள் அவிழ்த்து விடப்பட்டன. தன்னைச் சுற்றிலும் வீரர்களைப் பார்த்த வல்லாளர் திகைத்து நிற்கவே அவர்கள் அவருடைய கவசங்களைக் கழட்டினார்கள். வல்லாளர் மீண்டும் ஆக்ஷேபம் தெரிவிக்கவே அவர்கள் உரக்கச் சிரித்தார்கள். வல்லாளரை விடுதலை செய்வதாக கியாசுதீன் ஒத்துக் கொண்டதாலேயே தான் தன் சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்ததாக வல்லாளர் கூறிவிட்டு இப்போது தன்னை இப்படி நடத்தக் கூடாது எனக் கடுமையாக ஆக்ஷேபித்தார். வீரர்கள் விடுதலை தானே! ஒரேயடியாக விடுதலை தந்து விடுகிறோம் எனக் கூறிக்கொண்டே ஓர் கூர்வாளால் மன்னரின் மார்பில் வேகமாகப் பாய்ச்ச அதன் வேகம் தாங்க முடியாமல் மன்னர் "ரங்கா!" "ரங்கா!" எனச் சொல்லிக் கொண்டே கீழே விழுந்தார். அவரது ரத்தம் மதுரை மண்ணை நனைத்தது. சிறிது நேரத்தில் அவர் உயிரும் பிரிந்தது. புகழ் வாய்ந்த ஹொய்சள குலத்துக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஹொய்சள அரச வம்சத்தின் மூலம் தாங்கள் சுல்தானியரின் பிடியிலிருந்து மீண்டு விடலாம் எனக் கனவு கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை மேல் மண் விழுந்தது. அரங்கனை அரங்கத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்னும் பலரின் ஆவல் மறைந்து போனது.

இங்கே கண்ணனூர் யுத்த களம்! நடு நிசி! பிறை நிலவின் வெளிச்சத்தில் ஆங்காங்கே வீரர்களின் உடல்கள் கிடந்தது நிழலாகத் தெரிந்தது. ரத்த வாசனைக்குப் பிணம் தின்னிக் கழுகுகளும், ஓநாய்களும் கூட்டமாக வந்து போட்டுக் கொண்டிருந்த சப்தத்தில் உடல் நடுக்கமுற்றது. அப்போது அங்கே ஓர் சுல்தானிய வீரன் யுத்தக்களத்தில் கிடந்த உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டும் அவற்றை நகர்த்திக் கொண்டும் பார்த்த வண்ணம் இது இல்லை! ம்ஹூம், இங்கேயும் இல்லை என முணுமுணுத்துக் கொண்டும் வந்து கொன்டிருந்தான். அரை நாழிகைக்கும் மேலாகத் தேடியும் அவன் தேடிய உடல் அவனுக்குக் கிடைக்கவில்லை. மேலும் மேலும் தேடினான். ஓரிடத்தில் பல உடல்கள் குவியலாகக் கிடந்தன. அங்கே போய் ஆர்வமுடன் தேடினான். ஒரு உடலைக் கண்டு ஆர்வமாக, "சுவாமி!" எனக் கத்திக் கொண்டே அந்த உடலைப்புரட்டித் திருப்பினான்.

ஆஹா! பெண் குரல்! தேடியது ஆண் இல்லை. பெண்! யார் அந்தப் பெண்! உற்றுக் கவனித்தோமெனில் வாசந்திகா என்பது புரியும். ஆம் வாசந்திகா தான் குலசேகரன் வீழ்ந்து விட்ட செய்தியைக் கேட்டதிலிருந்து அரண்மனையிலிருந்து தப்பி ஓடி வந்து அவன் உடலைத் தேடிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாகக் கிடைத்து விட்டது. குலசேகரன் உடலைத் தன் மடி மீது வைத்துக் கொண்டு "சுவாமி! சுவாமி" எனப் புலம்பினாள். அழுகை பீறிட்டு வந்தது. அவன் உடல் முழுவதும் ரணமாக இருந்ததோடு அல்லாமல் இரு கண்களும் கூட ரணமாகிக் கிடந்தன.  அவன் உடலில் பல இடங்களில் தைத்த அம்புகள் நுனி குத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தன. அவற்றை மெல்ல அப்புறப்படுத்தினாள் வாசந்திகா. குலசேகரன் இறந்து விட்டானே என்னும் எண்ணத்தில் ஓலமிட்டுக் கதறினாள்! "என்னை விட்டு விட்டுப் போய் விட்டீர்களே!" எனத் தலையில் அடித்ஹ்டுக் கொண்டாள்.

அவன் மார்பில் கைவைத்துப் பார்த்தாள். சுவாசத்தைக் கவனித்தாள். எதுவும் தெரியாமல் நாடியைப் பிடித்துப் பார்த்தால் மெல்லியதாக ஜீவநாடி ஓடுவது புரிந்தது. "சுவாமி, சுவாமி! உங்களை எப்படியேனும் காப்பாற்றி விடுவேன். இறக்க விடமாட்டேன்!" என்று சொல்லிக் கொண்டே அவனை எழுப்பிப் பார்த்தாள். உலுக்கிப் பார்த்தாள். எவ்விதப் பலனும் தெரியவில்லை. பின்னர் சற்று யோசித்துவிட்டு அவனை எப்படியேனும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் வெறியோடு அவனைச் சிரமப்பட்டுத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு "ரங்கா!ரங்கா!" என முணுமுணுத்த வண்ணம் நடக்கத் தொடங்கினாள். மேற்குநோக்கி நடந்தாள் அவள்.

No comments: