எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 02, 2019

குலசேகரன் வீழ்ந்தானா?

முதலில் கள்ளர் படைகள் வந்து தாக்குகின்றனர் என்றே நினைத்த ஹொய்சளர்கள் பின்னால் சுதாரித்துக் கொண்டு சுல்தானியர் தாக்குதல் என்பதைப் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் திரும்ப பதிலுக்குத் தாக்கும் வண்ணம் அவர்கள் தயாராக இல்லை. கூக்குரலிட்டி தூரத்தில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே தங்கள் குதிரைகள், ஆயுதங்களைத் தேடி எடுத்தனர். அதற்குள்ளாகப் பல வீரர்கள் கீழே விழுந்து விட்டனர். பரபரப்புடன் அனைவரும் அங்கும் இங்குமாய் ஓடினார்கள். பலருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூடப் புரியாமல் பிரமித்து நின்றார்கள். அவர்களை மற்றவர்கள் தட்டிக்கொடுத்து தன் நிலைக்குக் கொண்டு வர முயற்சித்தார்கள். கவசங்களை மாட்டிக் கொள்வதற்குள்ளாகவே பலரும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் தைத்தும், வாளால் வெட்டப்பட்டும் விழுந்தனர்.

யாரையும் எழுந்திருந்து ஆயுதங்களை எடுக்க விடாமல் சுல்தானியர் கண்ட இடங்களில் எல்லாம் புகுந்து தாக்கினார்கள். படுத்திருப்பவர்கள் அப்படியே பரலோகம் போனார்கள். எழுந்தவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ள நேரமின்றிக் கீழே விழுந்தார்கள். குதிரைகள் பலவும் மேய்ந்து கொண்டிருந்ததால் ஹொய்சள வீரர்களால் அவற்றை உடனடியாகக் கொண்டு வந்து அணி வகுக்க முடியாமல் திணறினார்கள். குதிரைகள் ஒரு பக்கம் ஓட வீரர்கள் ஒரு பக்கம் ஓட நாலாபக்கங்களிலும் வீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போயிற்று. வெளியே கிளம்பிய ஓலங்களினாலும் கூக்குரல்களினாலும் கூடாரங்களில் இருந்த தளபதிகள் வெளியே வந்து நிலைமையைக் கண்டறிந்து திடுக்கிட்டுப் போனார்கள். அவசரமாக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கவசங்களைத் தரித்துக் கொண்டு போரிடக் கிளம்பினார்கள். வீரர்களை தைரியம் சொல்லித் திரட்டி எதிர்த்துப் போரிடச் சொல்லிக் கொண்டு அவர்களிடம் வந்தார்கள்.

அப்படியும் ஒரு சில வீரர்களையே திரட்ட முடிந்தது. ஆங்காங்கே கூடி நின்ற வீரர்கள் அவரவர் தளபதிகளுடன் சேர்ந்து சுல்தானியர்களுடன் சண்டை இடத் தொடங்கினார்கள். ஆனால் யாருக்கும் அதில் முழு ஆர்வம் இல்லை. போதிய ஆயுதங்களும் இல்லை; வீரர்களும் இல்லை! ஆகவே விரைவில் அவர்களும் அடிபட்டுக் கீழே விழுந்தார்கள். அரை நாழிகைக்குள்ளாக அந்தப் பிரதேசம் முழுவதும் குழப்பத்துடனும் கூப்பாடுகளும், கூக்குரல்களும் நிரம்பி தூசிப்படலம் பரவி என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் புரியாதபடி ஆகி விட்டது. அப்படியும் குலசேகரன் அங்குமிங்குமாக ஓடி வீரர்களை உற்சாகப்படுத்தி ஆங்காங்கே தானும் போரிட்டுக் கொண்டு வாளைச் சக்கரவட்டமாகச் சுழற்றிக் கைபடும் இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தினான். அவன் கண்கள் மன்னர் இருக்குமிடம் நோக்கித் தேடின. பின்னர் மன்னரைக் கண்டு பிடித்துக் கொண்டு அங்கே சென்று விரைவில் இந்தப் போர்க்களத்தை விட்டு மறைந்து சென்றுவிடும்படி அவரை வற்புறுத்தினான்.

மன்னர் போர்க்களத்தை விட்டு வெளியேறும் முன்னர் எதிரிகளின் கைகளில் அவர் மாட்டிக்கொள்ளாவண்ணம் பாசறைக்குச் செல்லும் வழியெல்லாம் வீரர்களை நிறுத்தி ஓர் வியூகம் அமைத்தான். எனினும் எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்து போன ஹொய்சளர்கள் என்னதான் வீரத்தோடு சண்டை போட்டும் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆங்காங்கே வீரர்கள் களத்தை விட்டு ஓடத் தொடங்கினார்கள்.  ஒரு நாழிகைக்குள்ளாக எல்லா வீரர்களும் களத்திலிருந்து தப்பிப் பின் வாங்கி ஓட ஆரம்பித்தார்கள்.சுல்தானியர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு கண்ணில் படும் வீரர்களைக் கொன்று குவித்தார்கள். சண்டை வெளியே நடக்கும் செய்தி உடனடியாகக் கோட்டைக்குள் சென்று அங்கிருந்தும் படையினர் வெளியே வந்து ஆக்ரோஷத்துடன் சண்டை இடத்தொடங்கினார்கள்.

சண்டை தொடங்கி இரண்டு முஹூர்த்த நேரத்தில் ஹொய்சளர்களின் விசுவாசத்திற்குப் பாத்திரமான ஒரு சில தளபதிகள், வீரர்கள் மற்றும் குலசேகரன் மட்டும் எதிர்த்துச் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். இந்த சமயம் யாரும் எதிர்பாராவண்ணம் ஓர் நிகழ்ச்சி நடந்தது. ஹொய்சளப் படையில்  இருந்த ஒரு லட்சத்து இருபதினாயிரம் வீரர்களில் இருபதினாயிரம் வீரர்கள் சமீபத்தில் துருக்க சமயத்தைத் தழுவிய தமிழ், தெலுங்கு, கன்னட வீரர்கள் இருந்தனர்.இவர்கள் தெலுங்கு நாட்டில் அரசரின் படையில் இருந்தவர்கள். இப்போது வீர வல்லாளரின் வேண்டுகோளுக்கிணங்கி தெலுங்கு நாட்டரசர் அவர்களை உதவிக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இந்த வீரர்கள் இப்போது திடீரென சுல்தானியர் பக்கம் வெற்றி கிடைக்கப் போகிறது என்பதை அறிந்து கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஹொய்சளப்படையினரின் செயல்பாடுகளை இத்தனை நாட்களில் நன்கு அறிந்து கொண்டிருந்ததால் அவர்களால் வெகு எளிதாக ஹொய்சள வீரர்களையே திருப்பித் தாக்க முடிந்தது.

விரைவில் ஹொய்சளப்படை சின்னாபின்னமாக்கப்பட்டது. அப்படியும் மன்னரைக் காப்பாற்ற வேண்டிப் பாசறைக்கு அருகேயே நின்று கொண்டு போரிட்டான் குலசேகரன். மன்னரையும் கிருஷ்ணாயியையும் உடனே ஓடிவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.  எத்தனை நேரம் தான் தாக்குப் பிடிக்க முடியும்? சுற்றியுள்ள வீரர்கள் ஒவ்வொருவராக விழ ஆரம்பித்து விட்டார்கள். அம்பு எடுத்து வில்லில் தொடுத்து விடுவதற்கு நேரமில்லாமல் தன் வாளை வைத்துக் கொண்டே சக்கரவட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சண்டையிட்டான் குலசேகரன். அவன் அருகே யாருமே நெருங்க முடியாமல் செய்தான். நெருங்கியவர்கள் அவன் வாளால் அடிபட்டுக் கீழே விழுந்தனர்.  குலசேகரனுக்கும் அதிக உழைப்பாலும் ஆவேசமாகப் போரிட்டதாலும் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.  கண் முன்னே எதிரிகள் இருப்பது கூட மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அவன் கண்கள் முன்னே ஹேமலேகாவும், வாசந்திகாவும் அழைப்பது போல் இருந்தது. ஆஹா! வாசந்திகா! அவளைக் காப்பாற்றத் தன்னால் முடியவில்லையே!

அப்போது பார்த்துப் பஞ்சு கொண்டானின் உருவம் அவன் கண் முன்னே தோன்றி, அரங்கன் என்னவானான் எனக் கேட்டது. அவன் கண் முன்னே அரங்கனின் செம்பொன் முகம் குறுஞ்சிரிப்புடன் காணப்பட்டது. என்னைத் தேடி ஏன் வரவில்லை என அரங்கன் கேட்பது போல் இருந்தது. அவன் மனம் அரங்கன் முகத்திலேயே ஆழ்ந்திருக்கக் கைகள் ஓர் இயந்திரம் போல் போர் புரிந்தன. அவன் இயக்கத்தில் தெரிந்த இந்த மாறுபாட்டைக் கண்ட சுல்தானியர் திகைத்தனர். அவன் இயக்கங்கள் தளராமல் அவன் சுழன்று சுழன்று கத்தி வீசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அவனை இயக்குவது ஏதோ ஓர் சக்தி எனப் புரிந்து கொண்டனர். சுல்தானியர் பலர் சேர்ந்து விடாமல் அவன் மேல் அம்பு மழை பொழிந்தனர். அடிபட்ட குலசேகரன், "ரங்கா! ரங்கா!" என அழைத்துக் கொண்டே கீழே விழுந்து புரண்டான்.

No comments: