எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 28, 2019

சாளரத்திலிருந்து கேட்ட கீதம்!

தத்தனுக்கு வல்லபனின் யோசனை பிடிக்கவே இல்லை. இதனால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். அதோடு அவர்கள் போகவேண்டிய காரியம் தடைப்படும். அதல்லவோ முக்கியம். இது தான் தத்தனின் கருத்து. ஆனால் வல்லபனோஅந்தப் பெண்ணிற்காகப் போராட வேண்டும் என்றான். அவளை எப்படியேனும் மீட்டு விட வேண்டும் என்றும் துடிதுடித்தான். இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மேற்கே இருந்து பல குதிரைகள் வரும் சப்தம் கேட்டது. உடனே தத்தன் வல்லபனிடம், "வல்லபா! எது எப்படியோ அந்த வீரர் தலைவன் சொல்லிச் சென்றது சரியான செய்தி என நினைக்கிறேன். தன்னைத் தொடர்ந்து பெரும்படை வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான் அல்லவா? இதோ பார்! உற்றுக் கேள்! ஓர் குதிரைப்படையே வரும் சப்தம் கேட்கிறது!" என்றான். பின்னர் மேலே செல்வதை விடுத்து அங்கேயே தங்கிப் பார்க்கலாம் என இருவரும் சுற்றுலா செல்லும் யாத்திரிகர்கள் போல அங்கும் இங்குமாகப் பார்த்த வண்ணம் வழியோரமாக நின்றனர். சற்று நேரத்தில் சுமார் 20,30 பேர்கள் அடங்கிய ஓர் குதிரைப்படை அங்கே வந்தது. அவர்களைக் கண்டதும் அது நின்றது. கூட்டத்தலைவன் இளைஞர்களை உற்றுப் பார்த்தான்.

சற்று யோசித்துவிட்டுப் பின்னர், அவர்களிடம் அந்த  வழியாகக் கூண்டு வண்டி ஒன்றும் அதைக் காவல் காத்துக் கொண்டு நான்கைந்து வீரர்களும் போனதைக் கண்டது உண்டா என விசாரித்தான். வல்லபன் வாய் திறப்பதற்குள்ளாக தத்தன் அவனிடம் கூண்டு வண்டியையும் வீரர்களையும் கண்டதாகவும் அவர்கள்  அங்கிருந்து வடகிழக்கே ஒரு காத தூரத்தில் இருக்கும் அம்பலப்புரம் என்னும் ஊரில் உள்ள சத்திரத்தில் தங்கப் போவதாகப் பேசிக் கொண்டனர் என்றும் சொன்னான். மேலும் அந்த வீரர் தலைவன் அவர்களிடம் உங்களைப் பார்த்தால் அங்கே அனுப்பி வைக்கச் சொன்னதாகவும் சொன்னான். இதைக் கேட்ட குதிரைப்படைத் தலைவன் அம்பலப்புரம் செல்லும் வழியைக் கேட்க முதலில் கிழக்கே கொஞ்ச தூரம் போனபின்னர் வடக்கே செல்ல வேண்டும் என்று தத்தன்  சொன்னான். இவ்வாறு அந்தக் குதிரை வீரர்களை மாற்று வழியில் திருப்பி விட்டான் தத்தன். அவர்கள் சென்ற பின்னர் இதைக் குறித்து வல்லபனிடமும் சுட்டிக் காட்டினான்.

பின்னர் இருவரும் அங்கிருந்து ஓடுமானூர் நோக்கிப் பயணப்பட்டார்கள். இரவு முதல் ஜாமத்தின் போது அவர்கள் ஓடுமானூரை அடைந்தனர். அதற்குள்ளாக ஊரே அடங்கி ஓசை இன்றிக் காணப்பட்டது. தெருவிளக்குகள் கூட எரியவே இல்லை. தெருவின் ஓர் மூலையில் பழைய கோயில் ஒன்று இடிபாடுகளோடு காட்சி அளித்தது. அதைப் பார்த்த வல்லபன் உணர்ச்சி வசப்பட்டான். அவனை மெல்ல அடக்கிய தத்தன் தெருவிலோ அல்லது ஊரிலோ எந்தவிதமான சப்தங்களும் இன்றி நிசப்தமாக இருந்ததில் பெரும் சந்தேகம் கொண்டான். இருவரும் மௌனமாகச் சத்திரத்தை அடைந்தனர். சத்திரமும் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. 

சத்திரத்தின் கதவைத் தட்டிப் பார்த்தனர். முன் கதவு தானே திறந்து கொண்டது. அங்கே  காணப்பட்ட பெரிய கூடத்தின் நடுவே குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்க அதன் ஒளி கூடம் பூராவும் பொன்னிறத்தில் பரவிக்காணப்பட்டது.  சத்திரம் பெரிய சத்திரம் என்பதால் கூடமும் அதற்கேற்பப் பெரிய கூடம்! இருவரும் சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் சத்திரத்துக் காவலரை "ஐயா!" என அழைத்தனர். யாரும் வரவில்லை. அங்கும் இங்குமாகச் சுற்றிப் பார்த்தபோது வல்லபனின் கண்கள் அந்தக் கூடத்தின் ஓர் சாளரத்தருகே அந்தப் பெண் நிற்பதைக் கண்டன. அவளும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது அவள் பார்வையில் இருந்து புலனாகியது.

வல்லபன் கொஞ்சம் திகைப்புடன் சாளரத்தருகே போக யத்தனித்தபோது முன்னர் பார்த்த மூதாட்டியின் கையைப் போன்றதொரு வயதான பெண்ணின் கை அந்தச் சாளரத்தின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டன. வல்லபன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தான். மூடிய சாளரத்திற்குள் இருந்து தீஞ்சுவைக்குரலில் ஓர் அழகிய தமிழ்ப்பாடல் இன்னிசையுடன் கேட்க ஆரம்பித்தது. அந்தக் குரல் அந்த இளம்பெண்ணின் குரலாகத் தான் இருக்க வேண்டும் என வல்லபன் யூகித்தான். பாடலை உற்றுக் கேட்டவனுக்கு அது நம்மாழ்வாரின் பாசுரம் என்பது புரிந்தது.

No comments: