எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 08, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா!

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.


அண்ணாமலைக் கோயிலில் மலை மேல் தீபம் ஏற்றும் உரிமை பர்வதராஜ குலம் எனப்படும் மீனவ குலத்தவருக்கே உரிமை உண்டு. ஈசன் மீனவனாய்ப் பிறந்து செய்த திருவிளையாடலை நினைவு கூரும் வண்ணமாயோ? தெரியலை. கொடி ஏற்றுவது தேவாங்கர் இனத்தவர். அவங்க நெய்து கொடுக்கும் துணியில் தான் கொடி ஏற்றப்பட்டு விளக்கு ஏற்றத் திரிக்குத் துணியும் பெறுகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழா வெகு கோலாகலமாய் நடைபெறும். தேரோட்டம் அப்போது தான் நடக்கும். அண்ணாலையார், விநாயகர், சுப்ரமணியர், உண்ணாமுலை அம்மன், சண்டேஸ்வரர் ஆகியோர் தேரில் வீதி வலம் வருவார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் எனப்படும் செட்டியார்களால் அதிகமாய்த் திருப்பணி செய்யப்பட்ட கோயிலும் இதுவாகும். இந்த ஊரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரதோஷ அபிஷேஹம் நடைபெறும். என்றாலும் அண்ணாமலையார் ஆலய மஹாநந்திக்கு நடக்கும் பிரதோஷ அபிஷேஹமே சிறப்பு வாய்ந்தது. இங்கே உலக நன்மைக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு ஒவ்வொரு பிரதோஷத்திலும் வேத கோஷங்களோடு திருமுறைகளும் ஓதப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபாடுகள் செய்வார்கள். காணக்கிடைக்காத காட்சி என்கின்றனர். கூட்டத்தை நினைச்சால் தான் பயமா இருக்கிறது. 


மேலும் தமிழ்நாட்டின் அனைத்து சிவன் கோயில்களிலும் காமதகனம் நடைபெறுவதில்லை. ஆனால் இந்தக் கோயிலில் காமதகனம் நடைபெறும். இந்தக் கோயில் கிரிவலம் அண்ணாமலையாரே செய்து வந்ததாய் ஐதீகம். அதை ஒட்டி இப்போதும் ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். உண்ணாமுலை அம்மனின் ஊடலைத் தீர்க்கும் திருவூடல் உற்சவம் அப்போது நடைபெறும். மலையைச் சுற்றுவதால் ஈசனுக்கு மலையைச் சுற்றும் மஹாதேவன் என்ற பெயரும் உண்டு. இங்கே கிரிவலப்பாதையில் உள்ள அநேக கோயில்களைத் தவிர பல பெரியோர்கள், சித்தர்கள், சுவாமிகள் போன்றோரின் ஆசிரமங்கள் உண்டு. இங்கே இருந்து உலகோருக்கு ஆன்மீகத்தைப் போதித்த பலரில் பகவான் ஸ்ரீரமண ரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், இசக்கி சுவாமிகள், ஆலமரத்து சாமிகள், காட்டு சிவா சுவாமிகள், கயிறு சாமி, பிரும்மானநந்த சுவாமி, ஜடை சாமி போன்றோர் ஆசிரமங்களும் சமீப காலத்தில் வாழ்ந்த யோகியான ராம்சூரத்குமார் அவர்களின் ஆசிரமமும் இருக்கின்றன. இது பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசிரமத்தில் எடுத்த படம். இங்கே உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தோமானால் நம்முள்ளே பல அரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகின்றனர். நாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம். தியானம் செய்ய நேரமெல்லாம் கொடுக்கவில்லை. சீக்கிரமாய்க் கிளம்ப வேண்டி இருந்த்து.  மற்ற ஆசிரமங்களையும் பார்க்க நேரமில்லை.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பெயரும், புகழும் பெற்றது இந்தத் திருவண்ணாமலையில் தான். அருணகிரியார் சம்பந்தாண்டான் என்பவன் தூண்டுதலின் பேரில் அரசனால் பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கட்டளை இடப்பட்டார். கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தி கைவரப் பெற்ற அருணகிரியார் தன் உயிரைத் தன் உடலில் இருந்து நீக்கிச் செத்த ஒரு கிளியின் உடலில் செலுத்திக்கொண்டு பாரிஜாதத்தைக் கொண்டு வருகிறார். ஆனால் அதற்குள் அருணகிரியாரின் உடலை எரித்துவிடுகிறான் சம்பந்தாண்டான். ஆஸ்தான புலவன் ஆன சம்பந்தாண்டானின் பொறாமையைப் புரிந்து கொள்ளாத மன்னனும் முதலில் அருணகிரி இறந்துவிட்டார் என்றே நம்புகிறான். பின்னர் கிளி வடிவில் அங்கு வந்து சேர்ந்த அருணகிரியார், கிளி கோபுரத்தில் அமர்ந்த வண்ணமே கந்தரநுபூதியைப் பாடினார். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அந்தக் கோபுரம் கிளி கோபுரம் என்று அது முதல் அழைக்கப் படுகிறது.

இதே போல் குகை நமசிவாயரின் சீடரான குரு நமசிவாயர் குருவின் ஆலோசனைப்படி திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் தியானத்துக்கு அமர்ந்தார். தியானம் முடிந்ததும் பசி எடுக்க உண்ணாமுலை அம்மனை நினைந்து “அண்ணாமலையார் அகத்துக்கு இனியாளே, உண்ணாமுலையே, உமையாளே, உண்ணச் சோறு கொண்டுவா!” என்று பாட அப்போது தான் கோயிலில் தங்கத் தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கலை அர்ச்சகர்கள் நிவேதனம் செய்து கொண்டிருக்க, தாம்பாளத்தோடு பொங்கல் குரு நமசிவாயரை வந்தடைகிறது. தங்கத் தாம்பாளத்தைக் காணாமல் திகைத்த அர்ச்சகர்கள் மனம் கலங்கி நிற்க, அங்கிருந்த ஒரு குழந்தையின் உடலில் புகுந்து கொண்ட அம்பிகை தங்கத் தாம்பாளத்தைப் பொங்கலோடு தான் குரு நமசிவாயருக்குக் கொடுத்த்தையும், தாம்பாளம் இப்போது ஒரு குறிப்பிட்ட மரத்தடியில் இருப்பதையும் சொல்லி அங்கிருந்து தாம்பாளத்தை எடுத்து வரச் சொல்ல, அவ்விதமே சென்று பார்த்தவர்களுக்குத் தாம்பாளம் கிடைத்த்து.

Sunday, January 23, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா!

2,668 அடி உயரமும் எட்டு மைல் சுற்றளவும் உள்ள திருவண்ணாமலையில் அரிய மூலிகைகளும், குகைகளும் உள்ளன. இந்த மலை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜதம் என்னும் ஈசனின் ஐந்து முகங்களை நினைவூட்டும் பஞ்சகிரி என்றும் கூறுகின்றனர். கிரிவலம் வரும்போது ஒரு இடத்தில் இந்த ஐந்து முக தரிசனத்தைக் காணலாம். கிழக்குத் திசையில் கிளம்புகையில் பார்க்கும்போது ஒன்றாய்த் தெரியும் மலையானது சுற்றும்போது இரண்டு, மூன்று என்று ஆரம்பித்து முடிக்கையில் ஐந்தாய்த் தெரியும் என்றனர். இந்தப் பஞ்சமுக தரிசனம் எங்களால் பார்க்க முடிந்தது. அது கிடைத்தாலும் கிரிவலம் நடந்து செய்யவில்லை என்பதால் திசைகள் சரிவரப் புரியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். திடீர்ப்பயணம் என்பதோடு இரவே ஊர் திரும்பும் திட்டமும் கூட. இரண்டு நாட்களாவது தங்கி இருந்து பார்க்கவேண்டும். அண்ணாலையில் அடிக்கு ஆயிரம் லிங்கங்கள் என்ற வழக்குச் சொல்லும், அதை ஒட்டிய ஐதீகமும் இருப்பதால் ஊரில் பெரும்பாலோர் செருப்பணிந்து நடப்பதில்லை.

அருணாசலேஸ்வரரின் மற்றப் பெயர்கள்: “லிங்கோத்பவர், இமயலிங்கம், பிரம்மலிங்கம், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாண சுந்தரர், அருணாசலேஸ்வரர், ஈசானலிங்கம், சிதம்பரேஸ்வரர், அக்னி லிங்கம், சம்புகேஸ்வரர், சநாதனேஸ்வரர், நாரதேஸ்வரர், சந்ந்தேஸ்வரர், வால்மீகீஸ்வரர், சநத்குமாரர், சனகேஸ்வரர், வியாச லிங்கம், வசிஷ்ட லிங்கம், குபேர லிங்கம், வாமரிஷீஸ்வரர், சஹஸ்ர லிங்கம், கெளசிகேஸ்வரர், குத்சரிஷீஸ்வரர், வைசம்பாதனேஸ்வரர், வருண லிங்கம், தும்புரேஸ்வரர், காசிலிங்கம், சதலிங்கம், விக்ரபாண்டீஸ்வரர், வாயுலிங்கம் ஆகியன. மேலும் இங்குள்ள மூலஸ்தானத் திருமேனியை ஸ்வர்ணபந்தன முறையில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் கூறுகின்றனர். இங்கு மலையே லிங்கம் என்பதால் அருணாசலேஸ்வரர் சந்நிதியில் உள்ள நந்தியெம்பருமான் மலையைப் பார்த்த வண்னமே அமர்ந்துள்ளார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களின் நந்திகளும் அவ்வாறே மலையைப் பார்த்த வண்ணமே உள்ளன. இங்கு உள்ள 106கல்வெட்டுக்களிலும் அருணாசலேஸ்வரரை, திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மஹாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என்று குறிப்பிடப் பட்டுள்ளார். நாட்டிய சாஸ்திரத்தின் தாண்டவ லக்ஷணம் என்னும் நூற்றியெட்டு நாட்டிய நிலைகளையும் விளக்கும் சிற்பங்கள் ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பாதாள லிங்கேஸ்வர்ர் சந்நிதியில் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இதை எல்லாம் நிதானமாய்ப் பார்க்கவேண்டும். :(

இந்தக் கோயிலில் சித்ரகுப்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. இங்கு உள்ள திருக்குளமும் சிவகங்கை என்ற பெயராலேயே அழைக்கப் படுகிறது. இந்தக் குளத்துக்கு இறங்கும் வாயிலருகே கம்பத்து இளையனார் சந்நிதி உள்ளது. இங்கே முருகப்பெருமான் வில்லேந்திய கோலத்தில் காட்சி அளிக்கிறான். அருணகிரியாரின் வேண்டுகோளின்படி பிரெளடதேவனுக்கு முருகன் காட்சி அளித்த இடம் இது தான் என்கின்றனர். கோப்பெருங்சிங்கன் என்னும் அரசன் அருணாசலேஸ்வரருக்குக் காதணிகள், ரத்தினமுடி, பிரபாவளி என்னும் ஆபரணம், கல்பவிருக்ஷம், முத்து விதானம், ரத்தினக் கட்டில் ஆகியவற்றையும் உண்ணாமுலை அம்மனுக்காக கற்கள் பதித்த அங்கியும் முருகனின் மயிலுக்குத் தங்க்க் கவசமும் செய்து வைத்திருக்கிறான். அண்ணாமலையாரை வேண்டி குழந்தைப் பேற்றுக்காகப் பல பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் கரும்புக்கட்டுகள் மற்றும் புடவைத் தொட்டில் கட்டிக் குழந்தையைப் படுக்க வைத்து மாடவீதிகளை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.


குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மஹாராஜாவுக்கு அண்ணாமலையாரே ஒவ்வொரு வருடமும் சிராத்தம் செய்து வருகிறார். வல்லாள மஹாராஜா இறைவனை வேண்டிக் குழந்தைப் பேற்றுக்காகப் பிரார்த்திக்க ஈசன் ஒரு சிவனடியாராகக் காட்சி அளிக்கிறார். சிவனடியாரை வணங்கி அவருக்கு வேண்டிய சேவைகள் செய்த மஹாராஜாவிடம், தன்னுடன் தங்க ஒரு பெண் வேண்டும் என்று அடியார் கேட்கத் தன் மனைவியான சல்லமாதேவியை அனுப்பி வைக்கிறான் வல்லாளன். அங்கே சென்ற சல்லமாதேவியோ அடியாரைக் காணாமல் ஒரு பச்சிளங்குழந்தையைக் கண்டு திகைக்கிறாள். மன்ன்னை அழைக்க வியப்படைந்த மன்னன் வந்து பார்க்க, அசரீரியாய்க் குரல் கேட்கப் பின்னர் ரிஷபாரூடராய் ஈசன் காட்சி அளித்து, இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத வல்லாள ராஜனுக்குத் தாமே குழந்தையாய் வந்ததாயும், அவனுக்குரிய ஈமக்கடன்களைத் தாமே செய்யப் போவதாயும் கூறி மன்னனை மகிழ்விக்கிறார் ஈசன். அது முதல் ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் மக நக்ஷத்திரத்தில் கொண்டப்பட்டு என்னும் கிராமத்தில் வல்லாளராஜனுக்கு ஈமக்கடன்கள் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் அங்கே எழுந்தருளுகின்றார்.


மாணிக்க வாசகர் இங்கே வந்து தங்கி இருக்கையில் தான் திருவெம்பாவையைப் பாடினார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரைத் தவிர கணம்புல் என்னும் புல்லை விற்று அண்ணாமலையாருக்குத் தினமும் தீபம் ஏற்றி வந்த கணம்புல்லாநாயனார் என்பவருக்கு ஒரு நாள் புல்லே விற்காமல் விளக்கு எப்படி ஏற்றுவது என யோசித்துத் தன் தலை முடியையே திரியாக்கி எரிக்க, அவரின் பக்தியைக் கண்டு ஈசன், அன்னையோடு அவருக்குக் காட்சி அளித்த தலம் திருவண்ணாமலையே ஆகும். எல்லாவற்றுக்கும் மேல் அருணகிரியாருக்கு முருகன் குருவாக வந்து அவரும் முருகன் மேல் திருப்புகழ் பாடக் காரணமாய் அமைந்த கோபுரம் இந்தக் கோயில் கோபுரமே. அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
ஸ்ரீரமணாஸ்ரமத்தின் தியான மண்டபம்.

Tuesday, January 04, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா, திருக்கார்த்திகை தீபம் தொடர்ச்சி

 
Posted by Picasa
சென்ற வருடத் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றிய விளக்குகள் ஒரு சிறு பகுதி மட்டும்.

திருக்கார்த்திகை தீபம் பிரமனுக்கும், மாலுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணம் மற்றுமில்லாமல் அம்பிகையானவள் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்று மாலை நேரம் வழிபாடுகள் செய்து திருவண்ணாமலை உச்சியில் ஈசனை ஜோதி வடிவாகப் பார்த்ததாக ஐதீகம் என்பதாலும் கொண்டாடப் படுகிறது. அப்போது தான் முதல் முதல் அம்பிகை திருவண்ணாமலையை கிரிவலமும் வந்து சிவபெருமானின் இடப்பாகத்தையும் வேண்டி பெற்றாள். திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசனம் செய்வது பற்றி அருணாசல புராணம் கூறுவதாவது:

கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்திவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்.

என்று சொல்கிறது. தாய் வழிப் பத்துத் தலைமுறையும் தந்தை வழிப் பத்துத் தலைமுறையும் நம்முடைய தலைமுறையும் சேர்ந்து இருபத்தி ஒன்று ஆகும். அல்லது தாய்வழி ஏழு, தந்தை வழி, நம் வழி ஏழு எனவும் கொள்ளலாம். இது மிகப் பழங்காலம் தொட்டே கொண்டாடிய ஒரு புராதனமான விழா என்பது திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது. மயிலையில் வாழ்ந்து வந்த சிவநேசர் என்பவர் தம் மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி இருந்தார். ஆனால் பூம்பாவையோ பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலை வந்தபோது இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டு அந்தக் குடத்தை எடுத்து வரச் செய்தார்.

கபாலீஸ்வரர் திருமுன்னே அந்தக் குடத்தை வைத்து பதிகம் பாடி, எலும்பாய் இருந்த பூம்பாவையை உயிர்த்து எழச் செய்தார். அப்போது பாடிய பதிகம் ஒன்றில்,

"தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்!" என்று கார்த்திகைத் திருநாள் தொல் கார்த்திகை என்று குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதில் இருந்து அது மிகவும் புராதனமான ஒன்று என்று தெளிவாகிறது. மேலும் ஈசனின் அட்ட வீரட்டானங்களில் ஒன்றான திரிபுர சம்ஹாரம் நடந்ததும் கார்த்திகை மாசம் என்றும் கூறுவார்கள். ஆகவே திரிபுரத்தை ஈசன் எரித்ததை நினைவூட்டும் விதமாய் முன் காலத்தில் எல்லாச் சிவன் கோயில்களிலும் பனை ஓலைகளால் கூடு அல்லது கோபுரம்போல் கட்டி அதைக்கொளுத்துவார்கள். இதைச் சொக்கர் பனை என்று சொல்லி வந்தது நாளடைவில் சொக்கப் பானை என்று மாறிவிட்டது. சொர்க்கத்தில் இருந்த அரக்கர்களை எரித்ததே சொர்க்கப் பனை என்பது சொக்கப் பானை என்று மாறிவிட்டதாயும் தெரியவருகிறது.

சிவன் இப்படின்னா விஷ்ணுவுக்கும் கார்த்திகை முக்கியம் தானே. மஹாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில் அவர் மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்கச் சென்ற போது மஹாபலிச் சக்கரவர்த்தி தீபங்களால் தன் மாளிகையை அலங்கரித்து இருந்தானாம். அதன் பின்னர் அவருக்கு மோக்ஷம் கிட்டியதும், அவர் இருந்த இடம் அசுரர்களால் தூய்மை இழந்ததால் எரிக்கப் பட்டதாயும், பின்னர் மஹாபலியின் வேண்டுகோளின்படி அவர் செய்தது போலவே நாடெங்கும் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என மஹாவிஷ்ணு அருள் பாலித்ததாயும் ஒரு கூற்று. அன்று சிறுவர்கள் தங்கள் கைகளில் நெருப்பால் ஆன சக்கரம் போன்றதைச் சுழற்றிக்கொண்டே தீப்பொறி விழும்படி செய்துகொண்டே, "கார்த்திகையோ, கார்த்திகை, மாவலியோ மாவலி!" என்று குரல் எழுப்பிக்கொண்டே ஆடுவார்கள். இப்போதைய தலைமுறைக்கு இதெல்லாம் தெரிந்திருக்காது! :(

Wednesday, December 29, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!


திருக்கைலை மலை. ஐயனும் அன்னையும் தனிமையில். ஐயன் அன்னைக்குப் பிரணவப்பொருள் உரைக்க அன்னையோ விளையாட்டாக இறைவன் கண்களைப் பொத்த, அகில உலகமும் நிலை தடுமாறுகிறது. சூரிய, சந்திரர்களாக இருகண்களும், நெற்றிக்கண் அக்னியாகவும் விளங்கியவற்றைப்பொத்தவும் எங்கும் இருள் சூழ்ந்தது. அஞ்சிய அம்பிகை தன் கைகளை எடுக்க உலகில் மீண்டும் ஒளி பிறந்தது. ஜோதி வடிவான ஈசனைத் தான் மறைத்ததுதான் காரணம் எனப் புரிந்துகொண்டாள் அன்னை. அந்த ஒரு கணம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் காரணம் தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்தன. ஆகையால் அன்னையைப் பாவம் சூழ்ந்துகொள்ள ஈசனை வேண்டினாள்.

பூவுலகம் சென்று அங்கே தம்மை மணலால் லிங்கமாய்ப் பிடித்து வைத்து வழிபடச் சொன்னார் ஐயன். அன்னையும் காஞ்சீபுரம் வந்து மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டுத் தவமும் புரிந்தாள். அன்னையின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போக அன்னைக்கு அருள் வழங்கினார் ஈசன். மேலும் திருவண்ணாமலைக்கும் வந்து தவம் இயற்றினால் தம் இடப்பாகத்தைப் பெறலாம் எனவும் கூறினார். ஆகையால் அன்னை அங்கே வந்து ஈசனின் திருவுருவமாகிய லிங்கத்தை அங்கிருந்த நதிக்கரையில் எழுந்தருளச் செய்து வழிபட்டாள். கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்திரம் கூடிய தினத்தில் ஐயனை ஜோதிவடிவாய்க் கண்டாள். மலையின் மேலும் ஜோதியாய்த் தெரிய ஐயனை வேண்டித் துதித்து அவரின் இடப்பாகத்தைப் பெற்றாள். முதலில் மலைமேல் தீபம் ஏற்றியது அன்னைதான் என்று ஒரு ஐதீகம். மேலும் இடப்பாகம் அடையவேண்டி இறைவன் மலையாக அமர்ந்திருக்கையில் அதைச் சுற்றித் தலைமேல் கைகூப்பியவண்ணம் அன்னை வலம் வந்ததாயும், அதனாலேயே இன்றும் கிரிவலம் வந்தால் கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும் என்பதும் ஒரு கூற்று..

இந்த அர்த்த நாரீசுவரர் தோற்றம் இன்னொரு வகையாகவும் கூறப்படுகிறது. திருக்கைலை மலையில் ஐயனும் அன்னையும் அமர்ந்திருக்கையில் சிவனடியார்கள் அனைவரும் வந்து வணங்கிச் சென்றனர். ரிஷிகள் முனிவர்கள், தேவாதிதேவர்கள் வந்து வணங்குகின்றனர். அவர்களில் ஒருவர் பிருங்கி முனிவர். அந்த பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். ஐயனை மட்டுமே வணங்குவார். அன்னையை வணங்க மாட்டார். ஐயனும், அன்னையும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒரு ஈயின் உருவெடுத்துக்கொண்டு சென்று ஐயனை மட்டுமே வலம் வருவார். அன்னைக்கு இது கொஞ்சம் உறுத்தலாய் இருந்த்து. அவரிடம் தன்னையும் வணங்கச் சொல்ல, அவரோ மறுத்தார். உடனேயே அவர் உடலின் சக்தியையெல்லாம் நீக்கினாள் அன்னை. நிற்கக் கூட முடியாமல் உடலின் சக்தி அனைத்தும் போய் எலும்புக்கூடாக ஆனார் பிருங்கி முனிவர். அவருக்கு நிற்க ஒரு ஊன்றுகோலைக் கொடுத்தார் ஐயன். அப்படியும் பிடிவாதமாய் அவர் இருக்கவே அன்னை ஐயனை வேண்டிப் பிரார்த்திக்க உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பாய்க் கொண்டாடப் படும். பதினேழு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் கொடியேற்றத்தோடு முதல் திருவிழா ஆரம்பம் ஆகிறது. முதல் மூன்று நாட்கள் விநாயகர், ஸ்ரீபிடாரி, ஸ்ரீதுர்கை ஆகியோருக்காகக் கொண்டாடப் படுகின்றன. காலை, மாலை இரு வேளைகளிலும் பஞ்சமூர்த்திகளும் வீதி உலா வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வாகனத்தில் ஈசன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பத்தாம் நாள் அதிகாலை நான்கு மணி அளவில் மலைமேல் மலை தீபம் ஏற்றும் முன்னர் பரணி தீபம் போடப் படும். உலகத்து மக்கள் அனைவரும் நன்கு சீரோடும், சிறப்போடும் வாழப் பிரார்த்தித்துக்கொண்டு ஏற்றப் படும். அன்று மாலையே மஹா தீபம் ஏற்றப்படும். தீப தரிசன மண்டபத்தில் மக்கள் கூட்டம் குவிந்திருக்கப் பஞ்சமூர்த்திகளும் காத்திருக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அர்த்தநாரீசுவரர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெளியே வந்து ஆடலோடு பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காட்சி தர அந்தக் கணம் பஞ்சமூர்த்திகளுக்கு தீப ஆராதனை எடுக்கப் பட்டு மலை உச்சியில் மஹாதீபமும் ஏற்றப்படும். அனைவரும் அண்ணாமலைக்கு அரோஹரா என்னும் முழக்கம் விண்ணைத் தொடும்.

தொடரும்

Thursday, December 16, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா ! 5


சோணகிரி வலம் வருதல் பிறவி எனும்
பெருங்கடற்குத் தோணி ஆகும்
ஏழ்நரகக் குழி புகுதாது அரிய முத்தி
வழிக்கு ஏற ஏணி ஆகும்
காண் அரிய தவத்தினுக்கும் அறத்தினுக்கும்
அரும்பொருட்கும் காணி ஆகும்
வாள் நுதல் மின் இடத்திருக்கும் கண்ணுதலை
மனம் உருக்கும் மகிழ்ச்சியாகும்.”

என்னும் தலப் புராணப்பாடல் ஒன்று கிரிவல மகிமையைக் கூறுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் கோயில்களையும் அஷ்டலிங்கங்களையும் பார்ப்போமா?? தேயு எனப்படும் அக்னியே இங்கே ஜ்யோதிர்லிங்க வடிவாகி ஸ்ரீசக்ர வடிவில் உள்ள இந்தப் பூவுலகின் உன்னதமான ஒப்பற்ற மேருவாக அருணாசலேஸ்வரர் என்ற பெயரில் விளங்குகிறார். இம்மலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவபதம் கிடைக்கும் எனவும், திங்கள்கிழமை வலம் வந்தால் இந்திரனைப் போன்ற சிறப்பான வாழ்க்கையும், செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் பிறவிப் பிணி நீங்கிவிடும் எனவும், புதன்கிழமை வலம் வந்தால் தேவர்களாகும் தகுதி கிடைக்கும் எனவும், வியாழனன்று வலம் வந்தால் மேலான பதவி சுகம் கிடைக்குமெனவும், வெள்ளியன்று வலம் வந்தால் விஷ்ணு பதவி கிடைக்குமெனவும், சனிக்கிழமை வலம் வந்தால் நவக்ரஹ தோஷங்களும் நிவர்த்தி அடையும் எனவும் புராணங்கள் கூறுகின்றன. இனி கிழக்குத் திசையில் உள்ள ஸ்ரீ இந்திர லிங்கத்தைப் பார்ப்போமா?


கிரிவலம் வரும்போது எந்த இடத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது நம் வசதியைப் பொறுத்தது என்றாலும் இப்போது எழுதும் வசதிக்காகக் கிழக்கே இருக்கும் இந்திரலிங்கத்தில் ஆரம்பிக்கிறேன். அறியாமை நீங்கவும், இருள் நீங்கவும், ஏன் அறியாமையே இருள் தானே? ஆகவே அவற்றை ஒழிக்க வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி அளிக்கிறார் இங்கே ஈசன். நாம் அறவழியில் செல்ல வேண்டி நம் வாழ்க்கைக்கே த்த்துவமான அறநெறியை அள்ளித்தருகிறார். இந்திரன் ஈசனை வணங்கி வழிபட்ட லிங்கம் என்று சொல்லப் படுகிறது.

அடுத்துத் தென் கிழக்குத் திசை. நீங்கள் கிழக்கே பார்த்து நின்றால் உங்கள் வலப்பக்கம் மூலையில் வரும். இது அக்னி மூலை எனப்படும். அக்னி அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான ஒன்று. வேள்வியில் மூட்டப்படும் அக்னிதேவன் ஏழுவகைப்படுவான் எனவும் ஏழு நாக்குகள் உண்டெனவும் கூறுவார்கள். நம் சார்பில் இறைவனிடம் வேண்டுதலை வைப்பவன் அக்னி பகவான். அக்னி ஒவ்வொரு யுகங்களிலும் மாறாமல் தொடர்ந்து வந்து இணைப்புச் சங்கிலியாய் இருக்கிறது. இங்கே அக்னி வழிபட்டதாய்க் கூறப்படுகிறது.

அடுத்துத் தென் திசை. ம்ருத்யு எனப்படும் மரணத் தெய்வம் ஆன யமனின் திசை. நம் மனதைப் பரிசுத்தப் படுத்தினால் மீண்டும் பிறவி ஏற்படாது. மாயையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிறவியும், மறுபிறவியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். அத்தகையதொரு துன்பத்திலிருந்து காப்பவர் யமலிங்கம். ஆன்மாவைக் கண்டருள உதவி செய்வதோடு ஈசனோடு ஆன்மா இரண்டறக் கலக்கவும் உதவுவார்.

அடுத்துத் தென்மேற்குத் திசை. நாம் செய்யும் அனைத்துக் கெட்ட செயல்களிலிருந்தும் விடுதலை பெற இவரை வழிபட வேண்டும். ஸ்ரீநிருதிலிங்கமான இவரை வழிபட்டால் நம் பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆத்மார்த்தமாக அமர்ந்து ஒரே முனைப்போடு இவரை வழிபட்டால் உள்ளத்தினுள்ளே ஜோதிமயமான தரிசனம் ஏற்படும் என ஞாநிகள் கூற்று. தென் திசையிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பும் மலைப்பாதையில் அமைந்துள்ளது ஸ்ரீநிருதி லிங்கம்.

ஸ்ரீவருணலிங்கம் இங்கே மேற்குத் திசையில் காட்சி அளிக்கிறார். நீரின்றி அமையாது உலகு என்பதற்கொப்ப இந்தப் பரந்த உலகில் மட்டுமல்லாது மூவுலகிலும் உள்ள நீருக்கெல்லாம் அதிபதியாக விளங்கும் இவர் வழிபட்ட இந்த ஸ்ரீ வருணலிங்கத்தை வழிபட்டால் நாடு செழிக்கும். நீர்நிலைகள் நிரம்பும், அனைவரையும் மகிழ்வோடு வாழ வைக்கும் ஸ்ரீவருணலிங்கத்தை வருணன் ஸ்தாபித்ததாய்க் கூறப்படுகிறது.

வடமேற்குத் திசையில் உள்ள ஸ்ரீவாயுலிங்கம் நம் ஜீவன் என்றே கூறலாம். காற்றில்லாமல் யாருக்கும் மூச்சு விடமுடியாது. காற்றுத் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனாய் விளங்குகிறது. காற்றில்லை எனில் இவ்வுலகம் இயங்குவது எவ்வாறு? காற்று கண்ணுக்குத் தெரியவில்லை எனினும் எங்கும் வியாபித்து இருக்கிறது. நிலைத்தும் இருக்கிறது. இயக்குவதும், இயங்குவதும் இவரே. நமக்கெல்லாம் சுவாசத்தை அளிக்கும் வாயுலிங்கத்தை ஸ்தாபித்தவர் வாயு என்று கூறுகின்றனர்.

அடுத்துக் குபேரதிசையான வடகிழக்கு மூலை. இங்கே ஈசான்ய லிங்கமும் குடி கொண்டிருக்கிறார். ஈசான்ய மூலை என்றும் கூறுவார்கள். குபேரன் ஈசனுக்கு நெருக்கமானவன். குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வத்துக்குக் குறைவிருக்காது என்று கூறுகின்றனர். ஈசான்யலிங்கமோ எனில் உடல் முழுதும் திருநீறணிந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூதகணங்கள் சூழ்ந்திருக்க முக்கண்ணோடும் ஜடாமுடியோடும், புலித்தோலில் அமர்ந்த வண்ணம் ஏழு ருத்ரர்களில் ஒருவராய்க் காட்சி தருகிறார் இவர். மலையே இங்கு ஈசன். ஈசனின் ஜோதி ஸ்வரூபமே மலை என்று முன்னரே பார்த்தோம். அத்தகைய மலையைச் சுற்றி அமைந்துள்ள இந்த அஷ்ட லிங்கங்களின் அமைப்பும் அந்த அந்த தேவர்கள் ஈசனை வழிபட்டதைக் குறிக்கிறது. ஸ்ரீவருண லிங்கத்தை அடுத்து உள்ள ஆதி அண்ணாமலையார் ஆலயத்தை மஹாவிஷ்ணு ஸ்தாபித்ததாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத் திருநாளின் மூன்றாம் நாள் அருணாசலேஸ்வரர் இந்தக் கோயிலுக்கு வருவார் என்றும் மலையை அம்பிகையோடு சேர்ந்து அவரும் வலம் வருவார் என்றும் தெரிய வருகிறாது. அடுத்து நாம் காணப்போவது கார்த்திகை தீபச் சிறப்பும், ஈசனின் அர்த்த நாரீசுவரக் கோலத்தின் சிறப்பும்.

Saturday, December 11, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 4

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே.
4.63.3
612

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே.

நாவுக்கரசர் தேவாரம்.


அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் கலங்கித் துன்பம் அடையும்போது ஆறுதலை அளிக்கும் ஆத்மாவாய்ச் சொல்லப் படுகிறது. புத்தியும், அகங்காரமும் பிரம்மனாயும், விஷ்ணுவாயும் செயல்பட்டு நம் உள்ளே ஒளிரும் உள்ளொளியைக் காண முடியாமல் அல்லல் படுகின்றனர். புத்தியிலே ஆணவம் அதிகம் ஆவதால் பிரம்மனால் காண முடியவில்லை. ஆனால் விஷ்ணுவோ சரணாகதி எனத் திருவடிகளைச் சரணடைவதால் அவருக்குக் காண முடியாவிட்டாலும் ஈசனின் அருள் கிடைக்கிறது.

நம் உள்ளத்தினுள்ளே இதயம் என்று நாம் சொல்வது, லப் டப் லப் டப் னு துடிச்சுக்குதே அது இல்லை ,நம் மார்பில் நட்ட நடுவில் ஒரு சின்னப் பொறியாக நம் கண்ணுக்கே தெரியாமல் சின்னத் துவாரமாக இருக்கிறது. மிக மிக சூக்ஷ்மமாகச் சின்ன துவாரத்தில் பொறியாக இருக்கும் அந்த அக்னி தான் நாம் நம்மை உணரும்போது ஆத்மதரிசனமாய்த் தெரிகிறது. இந்த உடலே நான் என்று நினைப்பதை அகற்றி உள்முக திருஷ்டியில் மனதைத் திருப்பி உள் ஒளியைக்காணுவதெ அருணாசல மலையின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியின் தத்துவம் ஆகும். அதுவே ஜோதி தரிசனமும் ஆகும். பழங்காலத்தில் இறைவனை ஜோதி வடிவிலேயே வணங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் நாளா வட்டத்தில் ஞானமும், யோகமும் மங்கிப்போக இறைவன் என்ற ஒரு வடிவத்தை உண்டாக்கிக் கொண்டனர்.

இந்த அற்புதமான அருணாசல மலையே ஜோதி சொரூபம் என்கிறார்கள். இது தோன்றிய நாளாக மார்கழித் திருவாதிரை நன்னாளைச் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். இங்கே ஜோதி உருவில் தோன்றிய ஈசனை தேவாதி தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் வழிபட்டு வணங்கிய நாள் மாசி மகா சிவராத்திரி என்றும் சொல்கிறது அருணாசல மஹாத்மியம். அன்று தான் லிங்கோத்பவர் உற்பத்தி என்றும் கூறுவார்கள். இந்த மலையில் ஈசன் அருணகிரி யோகியாக ஒரு சித்தர் வடிவில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாயும் சகல ஐஸ்வரியங்களையும் கொண்டுள்ள அதிசய குகை இருப்பதாயும் அருணாசல மஹாத்மியம் கூறுகிறது.

இந்த மலையக்காணக் கூடிய எல்லையிலிருந்து தரிசித்தாலும், மனத்தினால் நினைத்தாலும் கூட முக்தியைக்கொடுக்கும் என்றும் அருணாசல மஹாத்மியம் கூறுகிறது. அழலுருவில் ஈசன் நிரந்தர வாசம் செய்வதால் இங்கே ஞாநிகளும், சித்தர்களும் வசிக்கிறார்கள். அதோடு பிறருக்குத் தீங்கு செய்வதை நினைக்கவும் முடியாது எவராலும். ஏனெனில் ஈசனின் கோபாக்னி அவர்களைத்தண்டிக்கும்.

தொடரும்.

படங்கள் உதவி: கூகிளார் நன்றி.

Monday, December 06, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 3

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே.
4.63.3
612

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே.
4.63.4
613

பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே.

திருநாவுக்கரசர் தேவாரம்.



இங்கே தான் அம்பிகை ஈசனிடம் சரிபாதி பெற்றதாயும் ஐதீகம். அது நடந்த குன்று என்று பவளக்குன்றைச் சொல்லுவார்கள். கிரிவலப் பாதையில் வரும் பவளக்குன்றைத் தவிர அங்கே வண்ணாத்தி குகை, அருட்பால் குகை, மாமரத்து குகை போன்ற பத்துக்கும் மேற்பட்ட குகைகளும் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், பாத தீர்த்தம், அருட்பால் தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும், மயிலாடும்பாறை, ஆமைப் பாறை போன்றவைகளும் அல்லிச் சுனை, குமார சுனை, இடுக்குச் சுனை, புகுந்து குடிச்சான் சுனை போன்றவைகளும் உள்ளன. இவற்றில் இடுக்குச் சுனையில் நுழைய முடியாது என்றும் வலக்கையால் பாறை ஒன்றைப் பிடித்துக்கொண்டு இடக்கையால் நீரை அருந்தவேண்டும் என்றும் கூறுகின்றனர். இது தவிரவும் ஊமைச்சி குட்டை, அழகுக்குட்டை, கசபக்குட்டை, பண்டாரக் குட்டை, இலுப்பக் குட்டை ஆகிய குட்டைகளும் கிரிவலப் பாதையின் உண்டு.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரைத் தரிசனம் செய்த பின்னர் கிரிவலம் வந்தால் தான் வழிபாடு பூர்த்தி அடையும். ஒரு முறை கிரிவலம் செய்து பார்த்தாலே அதன் பலனைக் காண்போம் என ஸ்ரீரமண மஹரிஷி கூறுகிறார். கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலன் கிடைக்கும் எனவும், இரண்டாம் அடியில் புண்ய தீர்த்தங்களில் நீராடிய பலனும், மூன்றாம் அடியில் அஸ்வமேத யாகப் பலனும், நான்காம் அடியில் அஷ்டாங்க யோகப் பலனும் கிடைக்கும். கிரிவல நியதிகள் குறித்து ஜனக மஹரிஷிக்கு பிரம்மா உபதேசித்துள்ளதாய்ப் புராணங்கள் மூலம் அறிகிறோம். கிரிவலப் பாதையில் எத்தனையோ ரிஷிகளும், முனிவர்களும், ஞாநிகளும் சூக்ஷ்ம சரீரத்துடன் வலம் வருவதால் கிரிவலப் பாதையில் மட்டுமின்றி ஊரிலேயே அநேகர் செருப்புப்போட்டுக்கொள்ளாமலே நடக்கின்றனர்.

முக்கியமாய் கிரிவலம் வரும்போது வேகமாய் நடக்காமல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் காலில் செருப்பின்றி, ஆண்கள் மேலாடை இல்லாமல், குடை போன்றவை பிடிக்காமல் சிவ சிந்தனை ஒன்றுடனேயே வேறு பேச்சு எதுவும்பேசாமல் நடக்கவேண்டும். கைகளை வீசிக்கொண்டோ முன்னால் செல்பவர்களை அவசரமாய்த் தாண்டிக்கொண்டோ செல்லாமல், இடப்பக்கமாகவே செல்லவேண்டும். வலப்பக்கம் தேவர்களும், சித்தர்களும் பல உருவங்களிலும் வருவார்கள். அங்கே கிரிவலம் வரும்போது கூடவே வரும் பசு, கோழி, நாய், பூனை போன்றவை கூட சித்தர்களாகவோ, முனிவர்களாகவோ, ரிஷிகளாகவோ இருக்கக் கூடும். ஆகவே அவர்களை விரட்டவோ, இடைஞ்சலோ செய்யாமல் அமைதி காத்துக்கொண்டு வரவேண்டும். வாகனங்கள் எதிலும் கிரிவலம் செய்யக் கூடாது. எங்கே ஆரம்பிக்கின்றோமோ அங்கேயே கிரிவலத்தை முடிக்கவேண்டும்.
பெளர்ணமி தினத்தின் பூரண சந்திரனின் கிரணங்கள் மலை மீது வளர்ந்திருக்கும் மூலிகைகளின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும்போது அவற்றிலிருந்து கிளம்பும் அபூர்வ சக்தியால் பக்தர்களின் உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். ஐப்பசி, கார்த்திகை இரு மாதங்களிலும் கிரிவலம் வருவதும் சிறப்பாகும். கிரிவலப் பாதையில் 360 தீர்த்தங்கள் இருப்பதாகவும், விநாயகருக்கு என 16 தனிக்கோயில்களும் ஆறுமுகனுக்கு என 7 சந்நிதிகளும் இருப்பதாய்ச் சொல்கின்றனர். கிரிவலப் பாதையிலேயே இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. அதற்கு மூன்று வாசல்கள் காணப்படுகிறது. முதலில் பின்வாசல் வழியாக நுழையவேண்டும், பின்னர் இரண்டாம் வாசலைக் கடந்து, முதல் வாசல் வழியே குனிந்து ஒருக்களித்தவாறு வெளியே வரவேண்டும்.

நாங்க முயற்சி செய்ய வில்லை. அவருக்குக் கழுத்து பிரச்னை. எனக்கு மொத்தமுமே பிரச்னை தான். அதனால் மத்தவங்களுக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம்னு இருந்துட்டோம். கூட வந்தவர்களில் ஒருத்தர் போயிட்டு வெளியே வர முடியாமல் தவிச்சு, எல்லாரும் தவிச்சோம். அப்புறமா விநாயகர் அருளால் எப்படியோ வந்துட்டார். கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையார் கோயில் இருக்கிறது. இந்த லிங்கத்தைத் திருமால் ஸ்தாபிதம் செய்த்தாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது இரண்டாம் நாள் விழா மற்றும் மூன்றாம் நாள் விழாவில் அருணாசலேசுவரர் இங்கு வருவாராம். அடி அண்ணாமலையாரைத் தவிர, காளியம்மன், துர்கை, அருட்பெருஞ்சோதி, மாரியம்மன், ஆஞ்சநேயர், பூதநாராயணர், இரட்டைப் பிள்ளையார், இடுக்குப் பிள்ளையார், வீரபத்திரர் கோயில், தக்ஷிணாமூர்த்தி கோயில்கள், துர்கையம்மன் கோயில், வடவீதி சுப்ரமணியர் கோயில், முனீஸ்வரர் கோயில், நவகிரஹக் கோயில் என ஏராளமான கோயில்கள் உள்ளன. எல்லாவற்றையும் தரிசித்துக் கிரிவலம் வருவதற்குச் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் பிடிக்கும்.

இவற்றைத் தவிர, சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ஸ்ரீரமாணாஸ்ரமம், அண்ணாமலை சுவாமிகள் ஆஸ்ரமம், காட்டு சிவா ஆசிரமம், ஆலமரத்து ஆஸ்ரமம், ஜடைசாமி ஆஸ்ரமம், கயிறுசாமி என்ற பட்டினத்து சாமி சமாதி, யோகி ஸ்ரீ ராம்சூரத்குமார் ஆஸ்ரமம், பஞ்சமுகம் அருகில் இசக்கி சாமி, பிரும்மானந்ந்த சாமி சமாதிகள் போன்றவையும் உள்ளன. நாங்க நேரக் குறைவினால் ஸ்ரீரமணாஸ்ரமம் மட்டுமே போனோம்.