எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 19, 2016

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அழகிய மணவாளர் விக்ரஹம் இருக்குமிடம் தெரிந்து கொண்ட அந்தப் பெண்மணி மீண்டும் நெடுந்தூரம் பயணம் செய்து தில்லியில் இருந்து ஶ்ரீரங்கம் வந்தடைந்தாள். திருவரங்கம் வந்ததும் கோயில் ஊழியர்களைக் கூட்டி அவர்களிடம் அழகிய மணவாளரின் இருப்பிடத்தைக் குறித்துக் கூறினாள். அவரை எப்பாடு பட்டேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அனைவரும் சம்மதித்துப் பாடத்தெரிந்த சிலரும், ஆடத்தெரிந்த சிலரும் ஒன்று கூடினார்கள். சுமார் அறுபது பேர்களை ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகக் கண்டு எடுத்து அனைவரும் மீண்டும் தில்லி நோக்கிப் பயணித்தார்கள்.

அவர்கள் அனைவரும் உசேன் கசன்பி பாதுஷாவின் மாளிகைக்குச் சென்று பாதுஷா மனம் மகிழும் வண்ணம் ஆடல், பாடல்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். மனம்மகிழ்ந்த பாதுஷா அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை மனம் நிறையும் வண்ணம் கொடுப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் தங்களுக்கு இந்த விலை மதிக்கக் கூடிய தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், ஆடை, ஆபரணங்கள் தேவையில்லை என்றும் விலை மதிக்க முடியாத வேறொரு பரிசு பாதுஷாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அது அவர்களைச் சேர்ந்தது தான் என்றும், படையெடுப்பின் போது இங்கே வந்து விட்டது என்றும் அதைத் திரும்பக் கொடுத்தால் போதும் என்றும் இறைஞ்சினார்கள். அப்படிப் பட்ட பரிசு என்ன என்று பாதுஷா கேட்டதற்குத் திருவரங்கன் சிலை தான் என்றனர்.

அதைக் கேட்ட பாதுஷா அந்தச் சிலையில் அப்படி என்ன இருக்கிறது? அதைப் போய்க் கேட்கிறீர்களே என்று சொல்லிவிட்டு அந்தச் சிலை அந்தப்புரத்தில் அவன் மகள் விளையாடுவதற்கு எடுத்துப் போயிருப்பதாகவும் அவளிடமிருந்து அதை எடுத்துக் கொள்ளுமாறும் கூறினான்.  சந்தோஷம் அடைந்த நாட்டியராணிகள் அந்தப்புரம் சென்று சுரதானியிடம் விக்ரஹத்தைக் கேட்டு வாங்கச் சென்றார்கள். அங்கே சென்றால் விக்ரஹம் சர்வாலங்கார பூஷிதராக அலங்கரிக்கப் பட்டுச் சுரதானி அதன் எதிரே மெய்ம்மறந்து தன்னையும் இவ்வுலகையும் மறந்து அமர்ந்திருந்தாள்.  அவள் முகமே தெய்விகமாகக் காட்சி அளித்தது. இதைக் கண்ட நாட்டியப் பெண்கள் எப்படி எடுத்துச் செல்வது என்று பயந்து போனார்கள். இந்த அழகிய மணவாளர் தன் அழகால் இந்தத் துலுக்கப் பெண்ணையும் தன் வசப்படுத்தி விட்டாரே எனப் பேசிக் கொண்டார்கள். பின்னர் சாதாரணமாகக் கேட்டால் இவள் தரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு சுரதானியிடம் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்தார்கள்.

பின்னர் அவளுக்குப் பிரசாதம் கொடுப்பதாக நடித்து அந்தப் பிரசாதத்தில் மயக்க மருந்தைக்கலந்து கொடுத்துவிட்டார்கள். அதை உண்ட சுரதானியும் மயக்கத்தில் ஆழ்ந்து போக விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு அரங்கம் திரும்பினார்கள் நாட்டியராணிகள். ஆனால் இங்கே மயக்கம் தெளிந்து எழுந்த சுரதானியோ விக்ரஹத்தைக் காணாமல் கலக்கம் அடைந்தாள். அழுது புலம்பினாள். அது இல்லாமல் தான் உயிர் வாழ மாட்டேன் என்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் முயன்றாள். பாதுஷாவுக்குச் செய்தி போக தன் மகளின் இந்த அதீதக் காதல் அவனை ஆச்சரியப் படுத்தியது.  மகளின் பாசத்தின் ஆழத்தைக் கண்ட அவன் உடனே சிறு படை ஒன்றைத் தயார் செய்து விக்ரஹத்தைத் தூக்கிச் சென்றவர்களைப் பின் தொடருமாறு பணித்தான். சுரதானி தில்லியில் இருக்க மனமின்றித் தானும் அந்தப் படையோடு சென்றாள்.

தில்லி சுல்தான் தங்களைத் தொடருவது கண்டு அந்தப் பாடகர்களின் குழு ஶ்ரீரங்கத்திற்குச் செல்லாமல் வழியிலேயே திருமலைக்குத் திரும்பி விட்டது. அங்கே அழகிய மணவாளரை ஒளித்து வைத்தார்கள். விக்ரஹத்தைத் தேடித் திருவரங்கம் வந்த சுரதானி அங்கே அது இல்லாமல் சோகம் மிகுதியாகத் தன் உயிரை விட்டு விட்டாள். இதை அறிந்த கோயில் ஊழியர்கள் கோயிலின் கர்பகிரஹத்துக்கு எதிரே இருக்கும் அர்ஜுன மண்டபத்தில் இவளுக்காகத் தனி சந்நிதி ஏற்படுத்தினார்கள். இஸ்லாமியர் வழக்கப்படி விக்ரஹ ஆராதனை கூடாது என்பதால் இங்கே துலுக்க நாச்சியார் என்னும் பெயரில் சுரதானிக்கு வண்ணச் சித்திரமே காணப்படுகிறது. அகிலும், சந்தனமும் கலந்த தூபம் போடுவார்கள் இவருக்கு. இவருக்கு அரங்கநாதர் கைலி அணிந்தே காட்சி கொடுத்து அருளுவார்.  நிவேதனமும் சப்பாத்தி, பால், வெண்ணெய் என்று அளிப்பதாகக் கூறுகின்றனர்.

அநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இப்படி ஒரு துலுக்க நாச்சியார் சந்நிதி இருக்கிறது. இதைப் போலவே கர்நாடகா மேல்கோட்டையில் செல்வப் பிள்ளையும், அழகர் கோயிலில் கள்ளழகரும் துலுக்க நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

Sunday, May 08, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அம்சகலா விரும்பிய வண்ணம் நிறைவேற்ற சிங்கப்பிரான் மிகவும் கஷ்டப்பட்டார். திருமடப்பள்ளிக்குச் சென்று அங்கு அடுப்பினருகே சிந்திக்கிடந்த அரிசிகளைத் திரட்டி அம்சகலாவுக்கு வாய்க்கரிசி போட பத்திரப்படுத்தினார்.  அந்த அடுப்பிலிருந்தே இரண்டு எரியும் கட்டைகளையும் எடுத்துக் கொண்டார். அரங்கனின் துணிகளைத் துவைக்கும் ஈரங்கொல்லிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களிடம் பெருமாளின் பரிவட்டம் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்துக் கிடைத்த பழைய பரிவட்டத்தை எடுத்துக் கொண்டார். இனி மாலை ஒன்று தான் தேவை. அதற்கும் ஓர் வழி கண்டு பிடித்த சிங்கப்பிரான் அருகிலுள்ள சோழங்கநல்லூரில் குடி கொண்டிருந்த ஆநிரை மேய்த்த பெருமானுக்குச் சூட்டப்பட்டிருந்த மாலைகளில் ஒன்றை வேண்டிப் பெற்றார். பின்னர் எல்லாவற்றையும் பயன்படுத்தி அம்சகலாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.  அதன் பின்னர் இந்த உயிர்த் தியாகம் குறித்துத் திருவரங்கம் கோயிலின் அதிகாரிகள் திருவரங்கம் மீண்டும் உன்னதம் அடைந்த பின்னர் அம்சகலாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைத்ததாகவும், அதன் பின்னர் கோயிலைச் சார்ந்த எந்த தேவதாசி இறந்தாலும் இத்தகைய மரியாதைகளை அளித்து வந்ததாகவும் தெரிகிறது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இப்போது இல்லை.

இங்கே அரங்கனோடு சென்றவர்கள் ஊர்ப்பக்கம் சென்று அரங்கனின் நிவேதனத்துக்கும் மற்றும் பரிஜனங்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வந்தனர்.  அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது தில்லி சுல்தானின் ஆள் ஒருவன் அவர்களைத் தொடருவதாக நினைத்துக் கொண்டு அவனைத் தனிமையில் சென்று ஓரிருவர் சந்தித்தார்கள்.  தில்லி சுல்தானின் ஆளை மரத்திலிருந்து பறித்த மிளாறுகளால் அடித்து வீழ்த்தினார்கள்.  ஆனால் அவனுக்குத் திருவரங்கன் மேல் இருந்த அளவு கடந்த அன்பைப் பார்த்து அவனைக் குறித்துக் கேட்டார்கள். அவன் தான் 27 வருடஙக்ளுக்கு முன்னர் மாலிக்காபூர் தலைமையில் நடந்த யுத்தத்தின் போது அவனால் சிறைப்பிடிக்கப்பட்டு தில்லி சென்று மதம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தான். அப்போது தான் முதல் முதல் அரங்கனைக் குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தான்.

மாலிக்காபூர் தென்னாட்டை முற்றுகையிட்டுத் திரும்பும்போது கணக்கற்ற செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்றான். பொன் மட்டுமே 9000 மணங்கு என்று கணக்குச் சொல்கின்றனர்.  அவற்றை அவன் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். அப்போது தான் இவை தவிர திருவரங்கக் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரங்கநாதனின் அழகிய மணவாளன் என்னும் பெயர் கொண்ட அர்ச்சாவதார விக்ரஹமும் ஒன்று இருந்தது. அந்த விக்ரஹம் அப்துல்லா உசேன் என்னும் பாதுஷாவிடம் கிடைத்தது. அவன் மகளான சுரதானி தந்தைக்குக் கிடைத்த பரிசில்களை எல்லாம் பார்த்தவளுக்கு இந்த அரங்கநாதனின் விக்ரஹத்தின் அழகு கண்ணையும், மனதையும் கவர அந்தத் திருவரங்கன் விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமென்று கெட்டுப் பெற்றுக் கொண்டாள். அந்த விக்ரஹத்தின் பேரில் அசாத்திய பிரேமையும் கொண்ட அவள் ஒரு தெய்விகமான மனோநிலைக்கு ஆட்பட்டாள்.

அதற்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து அதன் முன்பாக தன்னை மறந்த நிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பது அவளுக்கு வாடிக்கை. அதை ஒரு கணமேனும் பிரியாமல் பாதுகாத்து வந்தாள். இங்கே திருவரங்கத்திலோ அடியார்களுக்கு அழகிய மணவாளப் பெருமான் இல்லாமல் அவரைப் பார்க்காமல் ஒரு நாள் கழிவதே பெரிய விஷயமாக இருந்து வந்தது. அதிலும் திருக்கரம்பனூரில் இருந்த அடியாள் ஒருத்தி எம்பெருமானைப் பார்க்காமல் உணவே அருந்த மாட்டாள். அவள் விக்ரஹம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தில்லிக்குப் போய்விட்டதையும் அறிந்து கொண்டு அது போன வழியே தானும் பிரயாணப்பட்டாள். பல மதங்கள் பயணம் செய்து அவள் தில்லியை அடைந்தாள். விக்ரஹம் சுரதானியிடம் இருப்பதை அறிந்து கொண்டாள்.

Tuesday, April 26, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! --உபதளபதி இறந்தான்!

அம்சகலாவால் தள்ளப்பட்ட உபதளபதி கீழே விழுந்து இறந்தது தற்செயலான ஒன்றாகவே தில்லிப் படைகளால் கருதப்பட்டது. எவருக்கும் அவன் எப்படி இறந்தான் என்னும் மர்மம் புரியவில்லை.  கோபுரத்தின் மேலேறிப் பார்த்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. தவறி விழுந்ததாகவே எண்ணிக் கொண்டு அவன் உடலை அடக்கம் செய்தார்கள். இங்கே அழகிய மணவாளபுரத்தில் சிங்கப்பிரான் என்பார் சகல மரியாதைகளுடனும், மேள, தாள வாத்தியங்களுடனும், பரிவாரங்களுடனும் ஶ்ரீரங்கம் நோக்கிக் கிளம்பினார். அவருக்கு அம்சகலா அங்கே போனதும் நடந்த விபரங்களும் தெரியாது. தில்லிப் படைகளின் நடமாட்டங்களையும் முன்னேற்றங்களையும் கணிக்க வேண்டுமானால் அவர்களுடன் நட்புப் பாராட்டுவது போல் இருந்து தான் பார்க்க முடியும். ஆகவே அவர் கிளம்பி இருந்தார். திருவரங்கத்தின் சில சொத்துக்கள் அழகிய மணவாளபுரத்தில் இருந்தன. அவற்றைக் கண்காணித்துக் கொண்டு இருந்தார் அவர்.

தில்லிப் படைகள் முகாம் போட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றவர் உபதளபதி ஒருவன் கோபுரத்திலிருந்து விழுந்து இறந்த செய்தியைக் கேட்டுக் கொண்டார். பின்னர் மற்றொரு உபதளபதியைக் காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார். உபதளபதியிடம் தில்லி சுல்தானின் ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துக் கொண்டார். தாம் கொண்டுபோயிருந்த பரிசுகளையும் உபதளபதிக்கு அளித்தார். முத்துக்கள், பவளங்கள், நீலங்கள், வைரக்கற்கள், தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள், ஆபரணங்கள், வெள்ளியினால் ஆன பொருட்கள், பட்டுப் பட்டாடைகள், அந்த நாட்களில் பண்டமாற்றுக்கெனப் பயன்பாட்டில் இருந்து வந்த யவனப் பொற்காசுகள், யானைகள், குதிரைகள், உணவுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் என அனைத்தும் இருந்தன. அதைப் பார்த்த உபதளபதியின் கண்களில் பேராசை மின்னியது. மிகவும் மகிழ்ந்து போனான்.

இதைத் தவிர பாடகர்கள் பலர் சுருதி போட்டவண்ணம் உள்ளே வந்து நமஸ்கரித்தனர். இன்னும் சிலர் இடுப்பளவு உயரமுள்ள பெரிய பெரிய குடங்களில் திராக்ஷை மதுவை நிரப்பிக் கொண்டு வந்தனர். மதுவைப் பார்த்த உபதளபதி அதன் வாசனையிலேயே கிறங்கிப் போனான். பின்னர் சந்தேகத்துடனேயே சிங்கப்பிரானைப் பார்த்து, "நீ யார்? ஏன் இவற்றை எல்லாம் எனக்குப் பரிசளிக்கிறாய்? காரணம் என்ன?" என்று சந்தேகத்தோடு கேட்டான். அதை ஹொய்சள வீரன் ஒருவன் மொழிபெயர்த்துச் சொல்ல சிங்கப்பிரான் நாங்கள் உங்கள் பிரஜைகள். உங்களுக்குப் பரிசாகக் கொண்டு வந்துள்ளோம், என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் நம்பாத உபதளபதி அந்த மதுவை சிங்கப்பிரானையே எடுத்து அருந்தச் சொன்னான். மதுவைத் தான் பருகுவதில்லை என்று அவர் எத்தனை சொல்லியும் கேட்காமல் அவரை வற்புறுத்தவே அவர் ஓர் கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றிக் குடித்துக் காட்டினார். பின்னரே தயக்கமின்றி அந்த மதுவை ஏற்றுக் கொண்டான் உபதளபதி.

பின்னர் அந்த அறைக்கு ஒரு அழகான மங்கையும் வந்து சேர்ந்தாள். அவள் அழகைப் பார்த்து வியந்தான் உபதளபதி. அவள் தன் பெயர் எம்பெருமானடியாள் என்று கூறினாள். அவளை அழகிய மணவாளபுரத்தின் ராணி என அறிமுகம் செய்தார் சிங்கப்பிரான்.  அவளை அருகே அழைத்து உபதளபதியை வணங்கச் செய்தார். அவள் சிங்கப்பிரானிடம் தான் உபதளபதியின் பாதுகாப்பில் இருக்க விரும்புவதாகச் சொல்ல அதை அப்படியே மொழி பெயர்க்கச் சொன்னார் சிங்கப்பிரான். அதைக் கேட்ட உபதளபதிக்கு மகிழ்ச்சி மீதூறியது. அவள் மேலும் திருவரங்கத்திற்கு உரிய நிலங்களையும் மற்றச் சொத்துக்களையும் சிங்கப்பிரான் நிர்வாகம் செய்யும்படி கேட்டுக் கொள்வதாகக் கூற அதையும் உபதளபதி ஒப்புக் கொண்டான். உரிய கப்பம் செலுத்திவிடுவதாக சிங்கப்பிரானும் கூறினார்.

இப்படியாக உபதளபதியைச் சமாதானம் செய்துவிட்டு சிங்கப்பிரான் கோயிலை நோக்கி நடந்தார். கிழக்கு வாயிலருகே செல்கையில் யாரோ தீனக்குரலில் முனகும் சப்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் துளசிச் செடிகளுக்கு இடையில் அம்சகலா கிடந்தாள். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அவள் உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக சேதம் ஆகி இருந்தது என்பது அங்கே தெரிந்த ரத்தச் சேற்றிலிருந்து தெரிந்தது. அவள் எப்படி இங்கே வந்தாள், என்ன ஆயிற்று என்றெல்லாம் புரியாத சிங்கப்பிரான் அவளைக் கீழே குனிந்து சோதித்துப் பார்த்தார். உயிர் கொஞ்சம் போல் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவளை அழைத்தார். மிகப் பிரயாசையுடன் கண்களைத் திறந்த அம்சகலா மிகுந்த சிரமத்துடன் அவரை யாரெனப் புரிந்து கொண்டாள்.

பேச வாயெடுத்த அவளால் பேச முடியவில்லை. என்றாலும் மெல்ல மெல்லத் தான் இங்கே வந்து தில்லித் தளபதியைப் பழி வாங்கிய கதையைச் சொன்னாள். திருவரங்கத்துக்காகவும் அரங்கனுக்காகவும் இப்படி எல்லாம் தியாகம் செய்த அம்சகலாவை நினைத்து நினைத்து வருந்திய சிங்கப்பிரான் அவள் தியாகம் எவ்வளவு பெரிது என்று உணர்ந்து கொண்டார். அவள் மனதில் ஏதேனும் ஆசை இருந்தால் நிறைவேற்றி வைப்பதாகச் சொல்ல அவளும் திருமடைப்பள்ளியிலிருந்து தனக்கு வாய்க்கரிசியும், பரிவட்டமும், கோயில் மாலையும் கொண்டு வந்து போட்டு மடைப்பள்ளியில் இருந்து கொள்ளி எடுத்து வந்து தன்னை எரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

Thursday, April 21, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வெள்ளைக் கோபுரத்தின் கதை!

ஏற்கெனவே இந்த நர்த்தகியின் தோழியின் தாய் ஶ்ரீரங்கத்துக்கு ஏற்பட்டிருந்த அவலங்களையும், நம்பெருமாள் ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் இன்னொரு பக்கமும் தனித்தனியாகப் பிரிந்து சென்றதையும் கேள்விப் பட்டு மனம் கொதித்துப் போயிருந்தாள். போதாதற்கு அவள் இன்னொரு தோழி ஒருத்தியும் உலுக்கானின் வாளால் காயம் ஏற்பட்டது புரையோடியதில் இறந்து விட்டாள். எல்லாமும் சேர்ந்து அவள் கொதிநிலையில் இருந்தாள். ஆகவே இந்தத் துலுக்கர்களைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். ஆகவே ஒரு நாள் அதிகாலையிலேயே எழுந்து சீவிச் சிங்காரித்துக் கொண்டு அரங்கன் கோயிலருகே வந்து மூன்றாவது வாயிலின் அருகே ஒய்யாரமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் அவள் கண்கள் அந்த வழியாக வருபவர்கள் போகிறவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. அப்போது துலுக்கப்படையின் உபதளபதி மற்ற வீரர்கள், ஊழியர்கள் ஆகியோரின் வேலையை மேற்பார்வை செய்வதற்காக அங்கே தன் குதிரை மீது ஏறி வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட அம்சகலா தான் மிகவும் நாணம் அடைந்தவள் போலப் போக்குக் காட்டிக் கொண்டு ஓரமாக ஒய்யார நடை நடந்தாள். தன் எழிலை எல்லாம் காட்டி அந்தத் துலுக்கத் தளபதியை மயக்கும் எண்ணத்துடன் கடைக்கண் பார்வையை அவன் மேல் வீசினாள். சாதாரணமாகவே பெண் பித்தனான உபதளபதி இப்படி வலிய ஒரு பெண் அவன் மேல் காதல் வலை வீசினால் சும்மாவா விடுவான்! அவனும் உடனேயே குதிரையை விட்டுக் கீழே இறங்கி அவளருகே சென்றான். அவள் கோயிலினுள்ளே செல்ல அவனும் அவள் பின்னேயே சென்றான்.

இருவரும் செல்கையில் மறைவான ஓர் இடம் வந்ததும் உபதளபதி அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முற்பட்டான். அவள் தன் சாகசங்கள் அனைத்தையும் காட்டி அவனை மயக்கி ஒரு கோபுர நிலைக்கருகே அழைத்துச் சென்றாள். அதன் படிகளில் விறுவிறுவென அவள் ஏறப் பின்னாலேயே அவனும் ஏறினான். கோபுரத்தின் மூன்று நிலைகளிலும் அவள் ஜாடையால் அங்கே கோயிலின் சொத்துக்கள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு சொல்லவே அதை நம்பி அவனும் பின் சென்றான். தந்திரமாக அவள் ஓர் இடத்தில் கோபுர நிலைவாயிலின் துவாரத்தருகே சென்று கையை நீட்டி வெளியே காட்ட, அவள் அழகில் முற்றிலும் மயங்கிக் கிடந்த உபதளபதியும் வெளியே எட்டிப் பார்த்தான். அவள் வஞ்சகமான புன்னகையுடன் அவன் கால்களைப்பற்றிக் கொண்டு தூக்கி அவனைக் கீழே தள்ளி விட்டாள். கீழே கல்தரையில் மண்டை பிளக்கப் படீர் என விழுந்தான் உபதளபதி!

தளபதி விழுந்த சப்தம் கேட்டு அங்கே கீழே கூட்டம் கூடுவதற்குள்ளாக அம்சகலா என்பாள் கோபுர துவாரத்தின் எதிர்பக்கம் சென்று அங்கே பொன்மயமான திருவரங்க விமானத்தைப் பார்த்தாள். "ரங்கா! ரங்கா!" என்று கூவினாள். விமானத்தின் பரவாசுதேவரின் உருவம் அவளைப் பார்த்துச் சிரித்து ஆசி கூறுவது போல் உணர்ந்தாள். மீண்டும், "ரங்கா! நான் பழிவாங்கிவிட்டேன்!" என்றாள். "ரங்கா, உன் அடியவர்கள் துன்புற்று இறந்தவர் எத்தனை பேர்! உன் செல்வமெல்லாம் பாழாய்ப் போய் விட்டதே! திருவரங்கத்தை இருள் சூழ்ந்ததே! நீ ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் ஒரு பக்கமுமாகப் பிரிந்து வாழ்கின்றீர்களே! இது அடுக்குமா? எப்போதும் ரங்கா ரங்கா என்ற ஆனந்தக் கூச்சல்களே கேட்டுக் கொண்டிருந்த திருவரங்கத்திலே இன்று ஒப்பாரி ஒலிக்கின்றதே! அரங்கா இதுவும் உன் திருவுளமோ? ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை! ரங்கா! ஆகவே என்னால் இயன்றவரை பழி தீர்த்துக் கொண்டேன்!" என்றாள்.

பின்னர் தன் கைகளைக் கூப்பித் தலைக்கு மேல் வைத்த வண்ணம் இமைகளை மூடிக்கொண்டு "ரங்கா! ரங்கா!" என்று கூவிய வண்ணம், "என்னை ஏற்றுக்கொள்!" என்ற வண்ணம் அவளும் கோபுர வாசலின் வழியாக வெளியே பாய்ந்தாள்.

Wednesday, April 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நாயகனைப் பிரிந்த ரங்க நாயகி!

ரொம்ப நாட்கள்/மாதங்கள் ஆகின்றன இங்கே வந்து! அரங்கனைப் பட்டினி போட்டுவிட்டு நிறுத்தியது தான் அதுக்கப்புறமா எழுத முடியாமல் பிரயாணங்கள். அவ்வப்போது சில பதிவுகளை எண்ணங்கள் பக்கத்தில் எழுதி வந்தாலும், இங்கே எழுதும்போது கூடுதல் கவனம் இருக்கணும் இல்லையா? நான் பாட்டுக்கு எழுதிடக் கூடாது. ஆகவே தகவல்களைச் சரி பார்க்கணும், சரி பார்க்கணும்னே போயிட்டு இருந்தது! சோம்பேறித்தனமாக இருக்கேனேனு உறுத்தலும் இருந்தாலும் வேறு வழியில்லை. :( அரங்கன் சாப்பிட்டானா என்னனு இப்போப் பார்ப்போம்.

அரங்கனுக்கு உண்ணக் கூட வழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பக்தர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் அமர்ந்திருக்க அந்தக் கூட்டத்தில் இருந்த நர்த்தகிகளில் ஒருத்தி தன் நகைகளைக் கழட்டிக் கொடுத்துப் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று தன் நகைகளை  விற்று வரும் பணத்தில் அரங்கனுக்கும், உடன் வரும் பரிஜனங்களுக்கும் தேவையான உணவைச் சம்பாதித்துக் கொண்டு வரும்படி இருவரை அனுப்பினாள். அந்தக் காலத்தில் பண்டமாற்றுக்கு உதவிய யவன நாட்டுச் செம்பொன் நாணயங்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்து உதவினாள். அவற்றை எடுத்துக்கொண்டு அடியார் கூட்டத்தில் இருவர் பக்கத்துக் கிராமத்தை நோக்கி நடந்தனர். அதற்குள்ளாக ரங்கநாயகித் தாயாரும் வேறுதிசையில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவளுக்கு என்ன நேர்ந்தது என்று பார்ப்போம்.
ரங்கநாயகித் தாயார் க்கான பட முடிவு
திருவரங்கக் கோயிலில் தனி சந்நிதி,அரங்கனுக்கு நிகராகத் தனி மரியாதைகள், வழிபாடுகள் என்று செங்கோலோச்சிக் கொண்டிருந்த ரங்கநாயகித் தாயார் இப்போது தன்னந்தனியாகத் தன் நாயகன் ஒரு திசையிலும் தான் மற்றொரு திசையிலுமாகப் பயணித்துக் கொண்டிருந்தாள். படையெடுப்பு நடந்த சமயம் பெரிய பெருமாளான ரங்கநாதரின் சந்நிதியைக் கல்சுவர் எடுத்து மூடிய அடியார்கள் ரங்க நாயகியைப் பெயர்த்து எடுத்து சந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் வில்வமரத்தினடியில் புதைத்து வைத்தனர். அந்த வில்வ மரம் இப்போதும் இருக்கும் வில்வமரம் தான் என்கின்றனர்.  உற்சவரான அர்ச்சாமூர்த்தியை ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணினார்கள். தாயாரின் நகை, நட்டு மற்றச் செல்வங்களையெல்லாம் பெட்டகங்களில் அடுக்கினார்கள். ஒரு சில பரிசனங்கள் துணை வர இந்த ஊர்வலம் மேற்கு நோக்கிச் செல்வதாக முடிவாகி இருந்தது. இந்த ஊர்வலத்தில் பின்னால் அழகிய நம்பி என்பாரும் அவருடைய ஆட்களும் சேர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி ரங்கநாயகித் தாயார் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அழகிய நம்பி என்பானும் அவனுடைய ஆட்களும் இரண்டு நாட்கள் இடைவிடாமல் பயணம் செய்து நாச்சியார் போய்க் கொண்டிருக்கும் திசையில் நாச்சியாரையும் கண்டு பிடித்தனர். பின்னர் அங்கிருந்த அனைவருடனும் கலந்து ஆலோசித்து ஊர்வலத்தைத் திருப்பதி/திருமலைப்பக்கமாய்க் கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆகவே அழகிய நம்பி ஊர்வலத்தைச் சாலை மார்க்கத்தில் செலுத்தாமல் காட்டு மார்க்கமாகவே செலுத்தினான். வழியில் தென்பட்ட கள்ளர் கூட்டத்தினரிடம் எப்படியோ தப்பி மூன்று தினங்கள் பயணம் செய்த பின்னர் நான்காம் நாள் காட்டு வழியில் சென்றபோது வழியில் தென்பட்ட அசாதாரணமான இயக்கங்களினால் அழகிய நம்பிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. கள்ளர் கூட்டம் தான் தொடர்ந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு தப்பி ஓட நினைத்து அதைக் குறித்துப் பேசுவதற்குள்ளாகக் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டது.

உடனே கள்வர்கள் தான் தொடர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கு காய்ந்து கொண்டிருந்த புற்களின் மேல் நெருப்பை வைத்துப் புகை உண்டாக்கி அந்தப் புகையில் அனைவரும் ஆளுக்கொரு திக்காய்த் தப்பி ஓடினார்கள். அழகிய நம்பி மூன்று ஆபரணப் பெட்டிகளுக்குப் பொறுப்பேற்றுப் பின்னாலேயே சென்றவன் சற்று தூரத்தில் ஒரு கணவாய் தென்படவே அங்கே சென்று கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தான். பெட்டிகளைத் தூக்கி வந்த ஆறுபேரும், அவர்களுக்கு உதவ வந்த மற்ற மூன்று பேரும் அன்றிரவை அங்கேயே கழிக்க எண்ணவே அழகிய நம்பியும் சம்மதித்து அங்கேயே தங்கினான். ஆனால் இரவில் கிசுகிசுவென்று சிலர் சேர்ந்து பேசும் குரல் கேட்கவே விழித்த நம்பி என்னவென்று பார்க்க பெட்டகங்களைத் தூக்கி வந்த ஆறு ஊழியர்களும் தாயாரின் ஆபரணங்களைத் தாங்களே பங்கிட்டுக் கொண்டு விடலாம் என்று பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான். என்ன செய்யலாம் என நம்பி சிந்திப்பதற்குள்ளாக அவனைக் கொல்வதற்கு ஆறு பேரும் பாய, நம்பி மற்ற மூவரையும் எழுப்பி இவர்கள் ஆறுபேரையும் எதிர்கொள்ள ஆயத்தமானான்.

நம்பியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டு ஓடிவிட்டனர். நம்பியும் மற்ற மூவரும் விடியும்வரை விழித்திருந்து பெட்டகங்களை அங்கேயே ஓர் இடத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அடையாளத்திற்காகச் சில கற்களையும் வைத்து மூடினார்கள். பின்னர் கிழக்கே நோக்கிப் பயணம் செய்தனர். 

அதற்குள்ளாக இங்கே திருவரங்கத்தில் துலுக்கர்களின் அராஜகம் அதிகமாக இருந்தது. அரங்கனின் சொத்துக்காகவே படை எடுத்த அவர்கள் ஒன்றும் கிட்டவில்லை என்பதறிந்து கோபம் கொண்டனர். ஆகவே அரங்கன் எங்கே போயிருக்கிறான் என்பதைக் கண்டறியவும் அவனுடைய சொத்துக்களும் அவனுடனே செல்கின்றனவா என்பதை அறியவும் ஒற்றர் படைகளை ஏவி விட்டால் சுல்தானின் தளபதி. மேலும் கோயிலிலும் பல இடங்களையும் தோண்டியும் இடித்தும் செல்வங்கள் கிடைக்கின்றனவா என்று தேடினான். பல சிற்பங்கள் உடைக்கப்பட்டன. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கற்றூண்கள் இடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கேள்விப் பட்ட அரங்கன் முன் ஆடும் நர்த்தகிகளில் ஒருத்தியான அம்சகலா என்பாள் துடிதுடித்தாள். தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே எனத் தவித்தாள்; உருகினாள்! வேதனையில் ஆழ்ந்தாள். அவளும் திருவரங்கத்தில் வாழ்ந்தவள் தான். இப்போது தப்பிக் காவிரியின் எதிர்க்கரையில் அழகிய மணவாளபுரம் என்னும் கிராமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தாள். 

Tuesday, September 08, 2015

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் பட்டினி கிடக்கிறான்!

அரங்கனோடு சேர்ந்து கொள்ள மேலும் அரங்கமாநகரிலிருந்து வந்தவர்களில் சில நாட்டியப் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் துருக்க வீரர்களிடம் மாட்டிக்கொள்ள ஒருத்தி மட்டும் எப்படியோ தப்பி அரங்கனைத் தேடிச் செல்லும் இருவருடன் சேர்ந்து கொண்டாள். இருவருமே இளைஞர்கள். தங்களுடன் ஓர் இளம்பெண் சேர்ந்து கொண்டது உள்ளூரப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தனர். வழியில் சத்திரம் ஒன்றில் தங்கியபோது அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்த துருக்க வீரர்களிடமிருந்து அவளைக் காக்கவேண்டி நெற்குதிருக்குள் அவளை மறைத்தனர். பின்னர் துருக்க வீரர்கள் திரும்பியதும் அங்கிருந்து தப்பியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆண் வேடம் போட்டு அழைத்துச் சென்றனர். இருந்தும்  மீண்டும் டில்லி சுல்தானின் வீரர்களின் தலைவன் ஒருவனிடம் மாட்டிக் கொள்ள விரர் தலைவன் அவளைப் பெண் என அடையாளம் கண்டு பிடித்தாலும் என்ன காரணத்தாலோ விட்டு விடுகிறான். 

மூவரும் உள்ளூரக்கலக்கத்துடன் மேலே நடக்க பாண்டியனுக்கு உட்பட்ட வாணாதிராயர் பரம்பரையார் அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்டு எதிர்கொண்டு அழைத்தனர். இரு இளைஞர்களையும் ஓர் இளம்பெண்ணையும் பார்த்துத் திகைக்க இளம்பெண் தன்னுடைய மனைவி என அவர்களில் தலைவன் ஆன இளைஞன் கூற விட்டு விடுகின்றனர். ஒரு வாரம் அங்குமிங்கும் அலைந்தவர்கள் ஒரு வழியாக அரங்கன் போன பாதையைக் கண்டுபிடித்தனர். விரைவில் அரங்கன் ஊர்வலத்தையும் கண்டனர். பல்லக்கில் எவ்வித நகைகளும் இல்லாமல் தன் பரிமள கஸ்தூரி மணம் மட்டும் சுற்று வட்டாரம் முழுதும் மணக்கக் காட்சி அளித்த அரங்கனைப் பார்த்துக் கண்ணீர் விட்டனர். அதோடு ஆரம்பத்தில் அரங்கனோடு சேர்ந்து வந்திருந்த கூட்டமும் குறைந்து போயிருந்தது. பெட்டகங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட விபரமும் அதிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் மனம் கலங்கிப் படுத்திருந்த பிள்ளை உலகாரியரையும் கண்டு விசனப்பட்டார்கள். 

அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்ட பிள்ளை உலகாரியர் டில்லி வீரர்கள் அரங்கமாநகரை விட்டுச் சென்றுவிட்டனரா என விசாரித்தார். அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதை இளைஞன் கூறக் கேட்ட பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு இப்படி ஒரு சோதனையா என மனம் வேதனைப்பட்டார்.  வந்தவர்கள் பல்லக்கின் அருகே சென்று பார்க்க, பல்லக்கு இருந்த கோலம் அவர்கள் மனதைப் பதற அடித்தது. ராஜகிளி, "அரங்கா! அரங்கா!" என்று சோகமாகக் கூறித் தன் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டது. பல்லக்கைச் சுற்றி இருந்த சித்திரத் துணிகள் கிழிந்து போய் இருந்தன. விதானங்கள் உடைபட்டு ஆங்காங்கே தூசியும் மண்ணும் கலந்து பல்லக்கின் ஒளியே குறைந்து காணப்பட்டது. அப்போது வந்தவர்கள், பெருமாளுக்கு விளக்காவது வைக்கக் கூடாதா எனக் கேட்க, எண்ணெய் இல்லாக் கொடுமையைச் சொல்லி அரற்றினார்கள் அரங்கனின் பரிசனங்கள். அதற்குள்ளாக இன்னொருவர் பல்லக்கின் திரையைத் திறந்து அழகிய மணவாளரின் தரிசனத்தைக் காட்ட அதைக் கண்ட மூவரும் திகைத்து உறைந்து போனார்கள்.

தங்கக்கீரீடம் தாங்கி, அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரீடமாக இருக்கும். நெற்றியில் நீலக்கல், வைரக்கல்லினால் ஆன திருநாமம், காதுகளில் கர்ணப்பூக்கள், மார்பில் பொன்னாபரணங்களும், ரத்தின ஆபரணங்களும் புரள, தங்கப்பூணூல் ஒளி வீச, கை,கால் இடைகளிலும் பொன் ஆபரணங்களைப் பூண்டு சர்வாபரண பூஷிதராய்க் காட்சி அளிக்கும் அரங்கன் இன்று படு ஏழையாகக் காட்சி அளித்தார். அரையில் சின்னப் பருத்தி வேட்டி. கையால் நெய்யப்பட்ட நூலினால் ஆன பூணூல், தலையில் கிரீடம் இல்லை! காதுகளில் ஆபரணங்களோ, திருமார்பில் ஆபரணங்களோ கிடையாது! கைகள், கால்கள், இடை எங்கும் ஆபரணம் எதுவும் இல்லாமல் வெறுமையாகக் காட்சி அளித்தார். அரங்கனின் நிலைமை பரிதாபகரமாக இருந்ததோடு அல்லாமல் மேலும் வருத்தத்தை அளிக்கும் சொல்லைக் கூறினார் அங்கிருந்த ஒருவர். காலையிலிருந்து பெருமாளுக்கு அமுது செய்யவே இல்லை என்றும் அமுது செய்ய வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூற வந்தவர்கள் கண்களில் கண்ணீர் மழையெனப் பெயதது. 

அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அரங்கனுக்கா இந்நிலைமை? இது என்ன கொடுமை! அரங்கனின் பொருட்களைக் கூடக் களவாடும் மனிதர்கள் இருக்கிறார்களா? மனிதர்கள் செய்யும் இந்தக் கொடுமையை அரங்கன் ஏன் கண்டிக்கவில்லை? தண்டிக்கவில்லை? ஏனெனில் இது அவன் செயல் அன்று! மனிதர்கள் செய்யும் கொடுமை! அவர்களின் விதியால் விளைந்த இந்தக் கர்ம பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். அரங்கனுக்கு அதனால் எவ்விதக் குறையும் இல்லை. அவன் இதற்கு எதுவும் செய்ய இயலாது. அவர்களாகத் திருந்தி வந்தால் தான் உண்டு. அதற்கும் காலம் கனிய வேண்டும். அவன் விதியை மீறி எதுவும் செய்யும் அதிகாரமோ, எண்ணமோ அரங்கனுக்குக் கிடையாது. ஆகையால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான்.  

திருவரங்க ஊரை மட்டுமின்றிச் சுற்று வட்டாரம் முழுதையும் அரங்கன் தான்பரிபாலிப்பாதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை. அவருக்கில்லாத சொத்தா? ஆனால் அனைத்தையும் துறந்து இதோ ஒரு துறவி போல் ஒரு காலம் அமுது செய்விக்கக் கூட வழியில்லாமல் அரங்கன் நிற்கையில் மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்!

Friday, September 04, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இனி மேலே நடந்தால் தான் விழுந்துவிடுவோம் என்பதால் தேசிகர் அங்கேயே நின்று விட்டார்.  இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தார்.  மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் தான் இரண்டே அடி தூரத்தில் இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்து விட்டு தேசிகர் தாம் தெய்வாதீனமாகத் தப்பித்ததை நினைத்து வியந்தார். பின்னர் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு தம் சீடரைக் கூப்பிட்ட வண்ணம் பள்ளத்தாக்கின் கரையோரமாகவே நடந்து சென்றார். சற்று நேரத்தில் அவர் குரலுக்குப் பதில் குரல் வந்தது. தூரத்தில் அக்கரையிலிருந்து வந்த குரலைக் கேட்ட வண்ணம் மேலும் நடந்தார். அதே போல் எதிர்க்கரையிலிருந்த பிரமதந்திரரும் குரல் கொடுத்துக் கொண்டே வர இருவரும் ஒரு நாழிகை நடந்து பள்ளத்தாக்கு முடிவடையும் இடத்தில் மேற்குக் கரை ஓரமாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்கள் விருத்தாந்தஙகளையும் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் பிரமதந்திரர்  டில்லித் துலுக்க வீரர்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்று கொண்டிருப்பதாயும் ஆகவே தாங்கள் இருவரும் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்தால் அவர்களிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார். பின்னர் இருவரும் ஆலோசித்து மேற்குத் திசை நோக்கிப் பயணப்பட்டனர். இப்படி அரங்கனைத் தேடிச் சென்றவர்களும், அரங்கனோடு சென்றவர்களும் விதி வசத்தாலும், பிராண பயத்தாலும் பிரிந்து ஒவ்வொரு திசை நோக்கிப் பயணப்பட்டனர். கள்வர் பற்றில் விட்டுப் பிரிந்த அரங்கனைத் தேடிப் போவோமா?

முதலாவது கள்வர் பற்றை விட்டுச் சென்ற திருவரங்கன் ஊர்வலத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை எவ்விதத் தொந்திரவும் எங்கிருந்தும் வரவில்லை. பிள்ளை உலகாரியரும் பெருமாளின் பல்லக்கிற்குச் சிறிது தூரம் முன்னாலேயே தமது சீடர்களோடு சென்றார். அப்போது மூன்றாம் நாள் மாலையில் அனைவரின் தலைக்கு மேலும், 'கீ, கீ" எனக் கிளி கத்தும் சப்தம் கேட்கவும் அனைவரும் மேலே அண்ணாந்து பார்த்தனர். அப்போது கூரக் குலோத்தமதாச நாயனார் என்பவர் உலகாரியரைப் பார்த்து, :சுவாமி இது அரங்கனுடனேயே வரும் ராஜகிளியைப் போல் தெரிகிறது. நம்மை இனங்கண்டு அழைக்கிறது போலும்!" என்றார். மீண்டும் கிளி என்ன செய்கிறது என்று பார்த்தால், கிளி, "கீ, கீ" என்று கத்தியவண்ணம் பின்னோக்கிப் பறந்தது. அதைப் பார்த்த பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு ஏதோ நிகழ்ந்திருப்பதால் கிளி தங்களை அழைக்கிறது எனப் புரிந்து கொண்டார். ஆகவே அவரும் திரும்பி விரைந்து பின்னோக்கிச் சென்றார்.

அரங்கன் பல்லக்கோடு வரும் ஊர்வலத்தை அடைந்த பிள்ளை உலகாரியர் திகைத்து நின்றார். மாபெரும் கள்வர் கூட்டம் அரங்கனையும், அரங்கனோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டிருந்தது. பரிசனங்களில் மூவர் கள்வரால் அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்தனர். கள்வர் தலைவன் கைகளில் ஆயுதபாணியாய் நின்றிருந்தான். வலக்கையில் வேலாயுதம் தூக்கிய வண்ணம் இருக்க தன் ஆட்களைப் பெட்டகங்களைத் தூக்கி எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பெட்டகங்களைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். உலகாரியர் அவனைப் பார்த்து இது அரங்கனின் சொத்துக்கள் என்றும் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வது மகா பாபம் என்றும் கூறக் கள்வர் தலைவனும் பாபம் தான் என்றாலும் அதைப் பார்த்தால் நாங்கள் பிழைக்க வழி என்ன என்றும் கேட்டான்.

மேலும் இது தன் எல்லைக்குள் வந்த சொத்துக்கள் என்றும் இவற்றை அபகரிப்பது தன் உரிமை என்றும் சொன்னான். கள்வர்களான அவர்கள் இந்தக் காட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஆட்சி செய்வதாகவும், இது அவன் எல்லைக்குள் வந்த சொத்தென்பதால் அவற்றைப் பறித்துக் கொள்வதாயும் திட்டவட்டமாய்க் கூறினான். உலகாரியரும் தம்மால் இயன்ற அளவு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். கள்வர் தலைவன் கேட்பதாக இல்லை. மனம் வேதனை அடைந்து பொறுமை இழந்த உலகாரியர் தம்மிடம் இருந்த ஒன்றிரண்டு ஆபரணங்களான காதுக்கடுக்கன்கள், கைத் தோடாக்கள், மோதிரங்கள் ஆகியவற்றையும் கழற்றி வீசினார். சற்றும் கவலை கொள்ளாமல் அவற்றையும் எடுத்துக் கொண்டான் கள்வர் தலைவன். அனைத்தையும் பறித்துக் கொண்ட பின்னரும் அவ்விடம் விட்டுப் போகாமல் பல்லக்கின் திரையை விலக்கி அரங்கனைப் பார்த்தான் கள்வர் தலைவன்.

உலகாரியர் மன வருத்தத்துடன் அதான் எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டு விட்டாயே! இன்னும் என்ன என்று கோபமாய்க் கேட்க அரங்கன் மேல் சாத்தி இருந்த நகைகளையும் கேட்டான் அவன். அவற்றையும் கழற்றிக் கொடுக்கச் சொல்லி உலகாரியர் சொல்ல பட்டாசாரியர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே கழற்றிக் கொடுத்தனர். பின்னரும் போகாமல் நின்றுகொண்டிருந்த கள்வர் தலைவனைப் பார்த்து,இன்னும் என்ன வேண்டும் எனக் கோபமாய்க் கேட்க, நாச்சிமார்களின் தாலிகளும், பெருமாளின் தங்கப்பூணூலும் இருக்கின்றனவே. ஒன்றுவிடாமல் கொடுத்துவிடுங்கள் என்று கள்வர் தலைவன் நெஞ்சில் ஈரமே இன்றிக் கூறினான். அழுது கொண்டே அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். கள்வர்களில் சிலருக்கு உலகாரியர் மேல் தனி மரியாதை இருந்தது. அவர்கள் மட்டும் ஒன்றுகூடி இவர் ஒரு மகான் இவருக்குத் தக்க மரியாதை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டு ஒரு தட்டில் தங்கக் காசுகள், கனி வர்க்கங்கள் என்று குவித்து எடுத்து வந்து அவருக்குக் காணிக்கை செலுத்த உலகாரியர் வெறுப்புடன் அவற்றை மறுத்துவிட்டு மேலே நடந்தார்.  அனைத்தையும் கள்வர்களிடம் இழந்த அரங்கனும் தன் மக்களைத் தொடர்ந்தான்.