எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, May 22, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அரசியின் கண்களையே பார்த்த குலசேகரனுக்குத் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியவில்லை. அரசியோ பேரழகியாகத் தெரிந்தாள். அவள் கண்கள் ஏதோ செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தன. அது என்னவென்றே அவன் அறியவில்லை. அரசியைப் பார்த்ததும் அவன் உடல் ஏதோ தீயில் முழுகிக் கொண்டிருப்பது போல் தகிக்க ஆரம்பித்தது. அவன் மெல்லக் கூடம் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த பெண்கள் அனைவருமே அவன் கண்களுக்கு அழகாகத் தெரிந்தார்கள். அப்போது தான் அவன் அந்தப் பாடலைக் கேட்டான். பாடியது ஹேமலேகா என்பதையும் அறிந்து கொண்டான். ஆனால் அவன் தேடித் தேடிப் பார்த்தும் அவன் கண்களுக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. திருமங்கை ஆழ்வாரின் இந்தப் பாடலால் அவனுக்குள் கொஞ்சம் சுய உணர்வு வந்தாற்போல் தோன்றியது. அவனுக்கு மீண்டும் அரங்கன் நினைவு வந்தது. அரங்கன் இருக்கும் நிலையை எண்ணினான். பஞ்சு கொண்டானுக்குத் தான் அளித்த வாக்குறுதிகள் நினைவில் வந்தன. அரங்கன் அவனைப் பார்த்து, "என்னை மறந்து விட்டாய் அல்லவா?" என்று கேட்பது போல் இருந்தது.

உடனே எழுந்து விட்டான் குலசேகரன். கிருஷ்ணாயிக்குத் தூக்கிவாரிப் போட்டது. "ஏன்? ஏன்? என்ன நடந்தது? என் சுவாமி? ஏன் எழுந்து விட்டீர்கள்? ஓ, அந்தப் பாடல் தான் காரணமோ? யார் அங்கே இந்தப் பாடலைப் பாடியது? இத்தனை சோகமான பாடலை ஏன் பாடினீர்கள்? அறிவில்லையா உங்களுக்கு? சந்தர்ப்பத்துக்கு ஏற்ற பாடலைப் பாட வேண்டாமா? சிருங்கார ரசத்தில் தமிழில் பாடல் ஏதும் இல்லையா?" என்று கத்தினாள். அவளுக்குத் தமிழ் அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் அவளால் பாடலை முழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்தப் பாடல் சரியில்லை என்றவரை அறிந்து கொண்டாள். ஆனால் குலசேகரனோ, "ராணி, நான் வந்து வெகு நேரம் ஆகி விட்டது! விடுதிக்குத் திரும்புகிறேன்!" என்று விடை பெறும் தோரணையில் கூறினான். ஆனால் கிருஷ்ணாயி இன்னும் சடங்குகள் இருப்பதாகவும் அவன் இப்போது போக முடியாது என்றும் சொல்லி அங்கிருந்த சேடியரைச் சீக்கிரம் செய்யும்படி விரைவு படுத்தினாள்.

உடனே ஒரு பெரிய தட்டு நிறைய மலர்களோடு இரு அழகான பொன் கங்கணங்களை எடுத்துக் கொண்டு ஒரு சேடிப் பெண் வந்தாள். கிருஷ்ணாயி அதை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு வீர, தீர சாகசத்துடன் தங்கள் யாத்திரையை நடத்திக் கொடுத்ததற்காகவும், தங்களை நன்கு பாதுகாத்ததிற்காகவும் என்று சொல்லி அந்தக் கங்கணங்களை வீரக்கங்கணங்கள் என அவன் கைகளில் அணிவித்தாள். வீரர்களை ராணி மாளிகைக்குள் அழைத்து இப்படி எல்லாம் மரியாதை செய்து அனுப்புவது துளுவ நாட்டு வழக்கம் என்றும் கூறினாள்.
குலசேகரன் கைகளில் அந்தக் கங்கணங்களை ராணி கிருஷ்ணாயி தன் கைகளால் போட்டு விட்டாள். அதற்குள் பொறுமையை இழந்த குலசேகரன் அதை அணிவித்ததுமே அவளிடம் விடை பெற்று வெளியே வந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான். சத்திரத்துக்குச் சென்ற குலசேகரன் கங்கணங்களைக் கழற்றித் தூர எறிந்துவிட்டான். அதைக் கண்ட குறளன் அவனிடம், என்ன இருந்தாலும் இவை பொன் கங்கணங்கள் அல்லவா தூர எறியலாமா என்று கேட்டான். அதற்குக் குலசேகரன் இவை வெறும் பொன்னாலான கங்கணங்கள் இல்லை. இவை நெருப்பால் ஆனவை. என் கைகளை எரிக்கின்றன. என் உடலே எரிகிறது!"எனக் கூறிவிட்டு உடனே படுத்துக் கொண்டு விட்டான். குறளன் அழைக்க அழைக்கத் திரும்பிக் கூடப்பார்க்காமல் தூங்கவும் ஆரம்பித்தான்.

ஆனால் அடுத்த நாளே அரண்மனைச் சேடி ஒருத்தி வந்து குலசேகரனிடம், "ராணி அழைக்கிறார்!" என அழைக்கக் குலசேகரன் வரமுடியாது என மறுத்துவிட்டான். குறளனுக்குப் பயமும் சந்தேகமும் வர, அவனைப் பார்த்துக், "குறளா! அவள் என் மனதை மாற்றப் பார்க்கிறாள். ஏதேனும் மருந்து வைத்து விடுவாளோ என பயமாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியாமல் என் மனம் அவளிடமிருந்து விலகி இருக்கச் சொல்கிறது. எதற்காக அவள் இப்படி எல்லாம் செய்கிறாள் என்றே புரியவில்லை. ஒரு வேளை துருக்கர்களின் உளவாளியாக இருப்பாளோ என அஞ்சுகிறேன்!" என்றான். மீண்டும் அடுத்தடுத்த இரு நாட்களும் சேடிப் பெண் வந்து அழைக்கக் குலசேகரன் செல்ல மறுத்தான்.

மூன்றாம் நாளும் ஒரு பெண் வரக் குலசேகரன் கோபத்துடன் என்னால் யாரையும் பார்க்க முடியாது எனக் கத்த வந்திருந்த அந்தப் பெண் கைகொட்டிச் சிரித்தாள். "பெரிய வீரரா இவர்? ஒரு பெண்ணைப் பார்க்க இவ்வளவு பயமா? அவரிடம் சொல்லுங்கள் ஐயா, நான் ஓர் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லுங்கள்." என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள். அப்போது தான் வந்திருப்பது அபிலாஷினி என்பதைக் குலசேகரன் அவள் குரலில் இருந்து அறிந்து கொண்டான். உடனே வெளியே ஓடி வந்தான்.


"அபி, என்ன ஓலை? எனக்கா? எங்கே இப்படிக் கொடு!" எனப் பரபரப்புடன் குலசேகரன் கேட்டான். அபி அவனைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுக் கலகலவெனச் சிரித்துக் கொண்டே ஓர் ஓலைச்சுருளை எடுத்து அவன் கையில் கொடுத்தாள். "யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? படிதும் மே தேஹி!" எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள். அதை அவள் கைகளில் இருந்து கிட்டத்தட்டப் பிடுங்கிக் கொண்ட குலசேகரன் அதை அவசரம் அவசரமாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில்:

"அரங்கனை மறக்கவேண்டாம். கொண்ட லட்சியம் முக்கியம்!அரண்மனையில் உங்களுக்கு ராணியால் மது அளிக்கப்பட்டது! அதைத் தொடர்ந்து உங்களை அருந்தச் செய்து உங்கள் லட்சியத்திலிருந்து உங்களை விலக்கி விடுவார்கள். வாழ்க்கையும் கெட்டு விடும். மதுவைத் தொடவே மாட்டேன் என சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக வாழ்ந்தால் தான் உங்கள் லட்சியங்களும் வாழ முடியும்! ஜாக்கிரதை!"

இவ்வளவே அதில் கண்டது. சிந்தனையில் ஆழ்ந்த குலசேகரன் கிருஷ்ணாயி தன்னை மதுவுக்கு அடிமையாக ஆக்க நினைத்ததைக் கண்டு திடுக்கிட்டான். அபிலாஷிணி பக்கம் திரும்பி இதை ஹேமலேகாவே நேரில் கொடுத்தாளா எனக் கேட்டான். அவளும் ஆமென்க, குலசேகரன் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தான். அவள் எங்கே தங்கி இருக்கிறாள் என்றும் கேட்டான். அதற்குய் அபிலாஷினி அவள் வீடா எனப் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு, "அவள் அரண்மனையில் தானே எப்போதும் இருக்கிறாள். அது தான் அவள் வீடு." என்று சொன்னாள். குலசேகரன் அவள் ஏன் அரண்மனையிலேயே தங்கி இருக்கிறாள் எனக் கேட்டதற்கு அபிலாஷிணி ஹேமலேகாவை ராணி வாசத்திற்கு வரும்படி அரசி கட்டளை இட்டுவிட்டதாகச் சொன்னாள். குலசேகரன் அப்படியே உறைந்து போனான்.

1 comment:

ஸ்ரீராம். said...

பாடல் கேட்டதை வைத்து அவனே அதைப் புரிந்து கொண்டிருக்கவேண்டும்!