எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 31, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பெரியவர் தன்னுடைய முக்கியமான ரகசியத்தைப் பகிர்ந்ததால் அழகிய நம்பியும் தைரியம் கொண்டு தான் அரங்கன் சேவையில் வந்திருப்பதையும் அரங்கன் இருக்குமிடத்தையும் அவரிடம் தெரிவித்தான். மேலே என்ன செய்யலாம் என்று பார்க்கவே தான் மதுரை வந்ததாகவும் தெரிவித்தான். அதைக் கேட்ட பட்சிவாகனன் என்னும் பெயர் கொண்ட அந்தப் பெரியவர் அரங்கனைத் தேடியே தில்லி துருக்கர்கள் அலைவதையும் எப்படியேனும் அரங்கனைத் தூக்கிச் செல்லும் வெறியோடு இருப்பதாகவும் கூறினார். நம்பி யோசனையில் ஆழ்ந்தான். அவரைப் பார்த்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு இன்னும் தெற்கே செல்ல முடியுமா எனக் கேட்டான். அவர் அது இயலாத காரியம் என்றும் எங்கும் தில்லிப் படை வீரர்கள் அலைந்து கொண்டிருப்பதாகவும் ஒற்றர்கள் வேறே கண்குத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ரகசியப் பாதை ஏதேனும் உண்டா என அழகிய நம்பி விசாரித்தான்.

அவர் அப்படி இருக்கும் பாதைகள் மட்டுமில்லாமல் காட்டுப் பாதைகளிலும் தில்லிப் படை வீரர்களும் ஒற்றர்களும் நிறைந்திருப்பதைச் சொன்னார். அழகிய நம்பி அதற்கு அரங்கனை ஏன் இப்படிக் கண்ணி வைத்துப் பிடித்துப் போக நினைக்கிறார்கள் என்று கேட்டுவிட்டு மனம் வருந்தினான். அதற்கு அவர் அரங்கனின் சொத்தின் மேலேயே தில்லி வீரர்களுக்குக் கண் என்றும் தென்னகம் முழுவதும் கொள்ளை அடிப்பதை விட அரங்கனின் சொத்து அதிகம் இருக்கும் என்பதால் அது தான் அவர்களின் முக்கியத் தேவை என்றும் சொன்னார். அழகிய நம்பி கவலையில் ஆழ்ந்தான். அழகர் மலையில் சிக்கிக் கொண்டு மறைந்திருக்கும் அரங்கனுக்கு அன்றாட நிவேதனத்துக்கே பிரச்னையாக இருந்து வருகிறது. எப்படியேனும் அவரைக் கண் மறைவாகத் தெற்கே அழைத்துச் சென்று விட்டால் பின்னர் அரஙன் பாடு இத்தனை கஷ்டம் இல்லை என நினைத்தவன் அதை அந்தப் பெரியவரிடம் சொல்லவும் சொன்னான். அரங்கனுக்கு ஏன் இந்தச் சோதனை என்றும் வருந்தினான்.

இந்த மண் மீது தோன்றியதால் அவருக்கும் இப்படி விதி இருக்கும் போலும் என்ற அந்தப் பெரியவர் தான் யோசித்ததில் ஒரு வழி புலப்படுவதாய்க் கூறினார். அது என்ன எனக் கேட்ட அழகிய நம்பியிடம் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 தில்லி வீரகள் இருப்பதாகவும் அவர்களோடு போரிட்டு வெற்றி கொண்டால் சுலபமாகப் போய் விடலாம் என்றும் சொன்னார். போரா என அதிர்ச்சி அடைந்தான் அழகிய நம்பி. படைகளுக்கு எங்கே போவது? எனக் கேட்ட அவனிடம் யாரிடமாவது நிலைமையைச் சொல்லிக் கேட்டுப் பார்க்க வேண்டும் என்றார் பெரியவர். அழகிய நம்பி என்ன செய்யலாம் என யோசித்தபோது சிறிய படை இருந்தால் கூடப் போதும் என்றார் பெரியவர்.


"படைக்கு எங்கே போவது? நம்மை நம்பி யார் தருவார்கள்?" என்றான் அழகிய நம்பி. பின்னர் கிளம்பும்போது அவரிடம் யோசித்து முடிவு எடுக்கலாம் எனக் கூறியவன் மேலும் அவரிடம் தன்னை முதல் முதல் சந்தித்த போது அவர் "கொற்றவைக்கு வெற்றி!" என்று சொன்னதன் பொருள் என்ன என்று கேட்டான். அவர் அதற்கு தன்னைப் போல் மதுரையில் தங்கியவர்களால் ஓர் ரகசியப் படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் துணை கொண்டு இங்கே அகப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் முக்கியமான பொருட்களை எப்படியேனும் வெளியே கொண்டு செல்ல முயற்சித்து வருவதாகவும் சொன்னார். அவர்களின் அடையாள மொழியே அந்தக் "கொற்றவைக்கு வெற்றி!" என்னும் சொல் என்றும் கூறினார். அழகிய நம்பி ஆச்சரியம் அடைந்தான். அந்தப் படை என்னவெல்லாம் செய்திருக்கிறது எனவும் விசாரித்தான்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரகங்களை நாஞ்சில் நாட்டுக்குக் கடத்தினதும் அங்கே பாதுகாப்பாக வைத்திருப்பதும் இந்தப் படை தான் என்றவர் இதுவரை இங்கே தங்கிய பெண்களில் ஐம்பது, அறுபது பேரை வெளியே கொண்டு போயிருப்பதாகவும் மிக்குதி இருப்பவர்களையும் கொண்டு போக முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். சட்டெனத் திரும்பியவன் கண்களில் அங்கிருந்த சாளரம் ஒன்றின் வழியே அந்தப் பெண் பரிமளம் அவனையே ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் பார்ப்பதைக் கண்டான். பட்சி வாகனன் அவனிடம் படை கிடைத்தால் அவர்கள் அனைவரையும் நினைவு வைத்துக் கோண்டு இங்கே வந்து விடுவித்துச் செல்லும்படியும் கூறினார். அதை அந்தப் பெண்ணும் ஆமோதித்தாள்.

No comments: