எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 08, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம்!

நாகர்கோயிலில் சில நாட்கள் கழிந்த பின்னர் அரங்கனின் ஊர்வலத்தார் அரங்கனை எடுத்துக் கொண்டு திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்றனர். அங்கே கரமனை ஆற்றைக் கடந்ததும், எதிரே "விளாஞ்சோலைப் பிள்ளை" என்பவர் ஓடோடி வந்து அரங்கனைக் கீழே விழுந்து வணங்கி கண்ணீர் பெருக்கி நமஸ்கரித்தார். இந்த விளாஞ்சோலைப் பிள்ளை என்பவர் "பிள்ளை உலகாரியரின்" ஆத்மார்த்தமான சீடர் ஆவார். உலகாரியர்  திருநாடு ஏகின பின்னர் (பூத உடல் மறைவு) அவர் சீடர் ஆன விளாஞ்சோலைப் பிள்ளை அவர்கள்  திருவனந்தபுரம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார் எனவும் சொல்லப்படுகிறது, இவர் விளாஞ்சோலையில் வாழ்ந்ததால் விளாஞ்சோலைப் பிள்ளை என அழைக்கப்பட்டார் என்றும் சொல்கின்றனர். இவர் தீவிர வைணவராக இருந்தாலும் தாழ்ந்த குலம் என்பதால் திருவனந்தபுரம் கோயிலுக்குள் இவரை அனுமதிக்கவில்லை எனவும் கேள்விப் படுகிறோம். என்றாலும் தென்கலை வைணவர்கள் நாள் தோறும்  இவரால் இயற்றப்பட்ட கீழ்க்கண்ட பாடலைப் பாடி வழிபட்டனர் என்கின்றனர்.

அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவம்என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறிகாட்டும்
அவனன்றோ ஆசா ரியன்.

ஏற்கெனவே மலைநாடு என அழைக்கப்படும் கேரளம் அப்போது நதிகள், நீர்க்காடுகள் அடர்த்தியாக இருந்த ஒரு தேசமாக இருந்து வந்தது. நாட்டின் உள்ளே செல்வதற்கு முறையான சாலைகள் இல்லை. சில அடி தூரம் சென்றால் ஏதேனும் நீர்நிலைகள் குறுக்கிடும். ஆகவே தோணிகளின் உதவியோ, தெப்பங்களின் உதவியோ இல்லாமல் அங்கே கடந்து செல்லுதல் இயலாது. காடுகள் அடர்த்தியாக இருந்தமையால் கள்வர்கள் தொந்திரவு வேறே அதிகமாக இருந்தது. அதோடு இல்லாமல் திருவனந்தபுரம் மட்டும் இல்லாமல் மலையாள தேசத்தின் முக்கியமான பகுதிகள் கடலோரமாக இருந்ததால் கடல்மார்க்கமாக வந்து பல துருக்கியர்கள் குடியேறி இருந்தனர். அவர்கள் திட்டுத் திட்டான இடங்களில் கூட்டமாக வாழ்ந்து வந்தனர்.  ஆகவே ஊர்வலத்தார் அவர்கள் கண்களில் படாமல் சுற்றிக் கொண்டு சென்று கடைசியில் பல்வேறு தடங்கல்களுக்குப் பின்னர் கோழிக்கோடு வந்து சேர்ந்தனர். அந்த நாட்களில் அந்த ஊர் "கோழிக்கூடு" என்றே அழைக்கப்பட்டது.

அப்போது மலையாளத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள் அங்கே பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த  ரவிவர்மன் என்னும் பெயர் பெற்ற மன்னனின் சந்ததியர்ஆகும். இந்த ரவி வர்மன் மிகப் பலம் பொருந்திய மன்னனாக இருந்தார். மிக வீரதீர பராக்கிரமங்கள் செய்த இவர் ஒருமுறை பாண்டிய நாடு வழியாகக் காஞ்சீபுரம் வரை சென்று வெற்றி கண்டு மலையாளம் திரும்பி இருக்கிறார். அத்தகைய புகழ் பெற்ற மன்னனின் சந்ததியர் தான் தற்போது மலையாளத்தை ஆண்டு வந்தார்கள். ரவிவர்மன் அளவுக்குப் பெயர் பெறவில்லை என்றாலும் யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். தென்னாட்டின் குழப்பங்கள் முக்கியமாய்த் தமிழ்நாட்டின் குழப்பங்கள் அங்கே இல்லை. ஆகவே தமிழகத்தில் இருந்து தப்பிச் சென்ற பலரும் அங்கே சரண் அடைந்து தங்கள் வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தச் சம்பவங்கள் இந்தக் கதையில் நடந்த சமயம் கோழிக்கூட்டில் பல தமிழ்நாட்டு தெய்வங்கள் தஞ்சம் புகுந்திருந்தனர்.  பல வைணவத் தலங்களின் பெருமாள்களும், தங்கள் தங்கள் நாச்சியார்களோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தனர். திருவரங்க அரங்க நாதர் அவர்களோடு அங்கே தஞ்சம் புகுந்தாலும் அவர்களுக்கெல்லாம் நடுநாயகமாக விளங்கினார்.  மேலும் வழியெங்கும் பல பாண்டிய நாட்டுச் சிற்றரசர்கள் அரங்கனை வரவேற்றுத் தங்கள் காணிக்கைகளைக் கொடுத்து அரங்கன் அருளுக்குப் பாத்திரமானார்கள். அனைவரும் அரங்கன் மேல் மாளாத அன்பு கொண்டு தங்கள் அன்பின் காரணமாக பல்வேறு ஆபரணங்களையும், திரவியங்களையும் தாராளமாக மனமுவந்து அளித்தனர். இதன் காரணமாக அரங்கனும் தன்னுடைய பழைய பொலிவைப் பெற்றான். பல்வேறு விதமான ஆபரணங்களைப் பூண்டு அங்கிருந்த பெருமாள் விக்ரஹங்கள் அனைவருக்கும் இடையே  இவரே பெரிய மாமன்னர் என்று தோன்றும்படியான அழகுடனும் கம்பீரத்துடனும் விளங்கினார்.

அப்போது கோழிக்கூட்டில் அரங்கன் ஊர்வலத்தார் மறக்க முடியா சம்பவம் ஒன்று நடந்தது. பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்திருந்த தெய்வ விக்ரஹங்களுக்குள்ளே ஆழ்வார்திருநகரியில் இருந்து வந்திருந்த சடகோபர் எனப்படும் நம்மாழ்வார் விக்ரஹமும் இருந்தது. நம்மாழ்வாரும் அங்கே எழுந்தருளி இருந்தார்.  ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பல மக்கள் அவரோடு சேர்ந்து அங்கே வந்திருந்தனர்.  அப்போது தான் அவர்களுக்கு ஶ்ரீரங்கம் அரங்கனும் அங்கே வந்து சேர்ந்திருக்கும் செய்தி கிட்டியது. 

4 comments:

நெல்லைத்தமிழன் said...

மிகுந்த முயற்சியோடு எழுதுகிறீர்கள். படிக்க மிகவும் ரசமாக இருக்கிறது. இன்றைக்கு வந்த இடுகைகளிலேயே இதுதான் அருமை.

அரங்கன் மலைநாட்டுக்கும் எழுந்தருளியிருக்கிறாரா?

தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திருவனந்தபுரம் கோயிலுக்குள் இவரை அனுமதிக்வில்லையா? வியப்பாக உள்ளது.

Geetha Sambasivam said...

நன்றி நெல்லைத் தமிழரே!

Geetha Sambasivam said...

ஆம், முனைவர் ஐயா, அந்தக் கால கட்டத்தில் மலையாள நாட்டில் தீண்டாமை அதிகம் இருந்து வந்தது. இந்த விஷயத்தில் தமிழகம் பலவற்றுக்கும் முன்னோடி!