எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 10, 2019

கிருஷ்ணாயியின் கதை!

அந்தச் சிறுவனைத் தூக்கி மடியில் போட்டுக் கொள்ளும் வரையில் குலசேகரனுக்கு அவன் தன் மகன் எனச்சொல்லுவதில் மனதில் விருப்பம் இல்லாமலே இருந்தது. ஆனால் அவனை மடியில் போட்டுக் கொண்டு பசியாலும், தாகத்தாலும் அரை மயக்கத்தில் கிடந்தவனைப் பார்த்ததுமே அவன் அடி வயிறு கலங்கியது. அவன் உள்ளுணர்வு இது உன் மகன் எனக் கூற அவன் அறிவோ அதை பலமாக மறுத்தது. போராட்டத்தில் அவனை ஆழ்த்தியது.  தவித்த குலசேகரனை அப்போது அந்தச் சிறுவனிடமிருந்து வந்த மெல்லிய முனகல் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானித்தது. அந்தச் சிறுவன் மீண்டும் முனக ஆரம்பித்திருந்தான். அவன் வாயிலிருந்து துணியைக் குலசேகரன் எடுத்து விட்டான். மயக்கத்தில் கண்களைத் திறந்து பார்த்த அந்தச் சிறுவன் கண்களில் குலசேகரன் பட்டதும், அந்தச் சிறுவனுக்குள் ஏதோ ஓர் மாற்றம், ஏதோ ஓர் கலக்கம்! அவன் குலசேகரனைப் பார்த்து மெல்லிய குரலில் "அப்பா! அப்பா!" எனப் புலம்பினான்.

அவன் குலசேகரனை அப்பா வென அழைத்தானோ அல்லது கோட்டைக்குள் இருந்த அரசரான வீர வல்லாளரைத் தான் தன் அப்பா என நினைத்துக் கொண்டிருக்கும் சிறுவன் குலசேகரனைப் பார்த்ததும் அவர் நினைவில் புலம்பினானோ தெரியவில்லை. ஆனால்"அப்பா" என்னும் ஒற்றைச்சொல் குலசேகரனுக்குள் ஏதேஹோ மாற்றங்களைச் செய்து அவன் இதயம் அவனையும் அறியாமல் பொங்கியது. பாசம் முழுவேகத்துடன் உத்வேகத்துடன் வெளிவர அவனுக்கு வெறி வந்தது போல் அந்தச் சிறுவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு முத்தமிட்டு, "மகனே! என் மகனே!" எனக்கத்தினான். அதைப் பார்த்த கிருஷ்ணாயியும் கண்ணீர் பெருக்கினாள். குலசேகரன் கண்களில் இருந்தும் கண்ணீர் மாலையாக வழிந்தோடியது. குலசேகரன் அவனை மீண்டும் மீண்டும் கட்டி அணைத்து அரற்றினான்.

அப்போது கிருஷ்ணாயி தாங்கள் இங்கே வந்து மாட்டிக் கொண்ட கதையைச் சொல்லலானாள். திருக்கோயிலூரில் இருந்து திரும்பும்போது கூட கிருஷ்ணாயிக்குத் திருவண்ணாமலைக் கோட்டை முற்றுகைக்கு ஆளாகி இருப்பது தெரியாது. ஆகவே அவள் வழக்கம் போல் கோட்டை வாசலுக்கு மிக அருகே வந்துவிட்டாள். அவளையும் அவள் பரிவாரங்களையும் கண்ட சுல்தானிய வீரர்கள் உடனே பாய்ந்தோடி வந்தார்கள். வீரர்கள் அவர்களை எதிர்த்து நிற்க ராணியின் பரிவாரங்களும் பல்லக்குத் தூக்கிகளும் ராணியையும் இளவரசனையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடினார்கள். சுல்தானிய வீரர்கள் அதற்குள்ளாகத் தன்னையும் தன் மகனையும் பிடித்து விடுவார்களோ எனப் பயந்த அரசி பல்லக்குத் தூக்கிகளிடம் சொல்லி விட்டுப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி அருகே இருந்த ஓர் அடர்ந்த சோலைக்குள் புகுந்து மறைந்து கொண்டாள். அங்கேயே ஒரு நாள் முழுவதும் ஒடுங்கி ஒளிந்திருந்த ராணியை மன்னர் அனுப்பிய மெய்காப்புப் படை வீரர்களில் மூவர் கண்டு கொண்டார்கள்.

அவர்கள் ராணியையும், இளவரசனையும் அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் கோட்டைக்குள் எப்படியேனும் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டு இந்தத் தாழைப்புதருக்குக் கீழ் அவர்களைத் தங்க வைத்தனர். பின்னர் கோட்டைக்குள் எப்படிச் செல்வது என்பதைக் கண்டறிந்து வந்து அழைத்துச் செல்கிறோம் எனக் கிளம்பிச் சென்றார்கள். மூன்று நாட்கள் கழித்தும் வரவில்லை. காத்திருந்து காத்திருந்து ஒரு வாரம் போல் ஆகிவிட்டது. பின்னரும் அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.  ராணியும் இளவரசனும் ஒரு வாரமாகப் பட்டினி கிடக்கிறார்கள். ராணி எப்படியோ அதைத் தாங்கிக் கொண்டாள். இளவரசன் பழக்கம் இல்லாததாலும் சிறிய வயது என்பதாலும் விரைவில் சுருண்டு விட்டான்.இதைக் கேட்ட குலசேகரன் முதலில் அவர்களுக்குத் தேவையானது உயிர் வாழ ஓர் வாய் உணவு என்பதைப் புரிந்து கொண்டான்.

ஆகவே கிருஷ்ணாயியிடம் "இதோ வருகிறேன்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி ஓட்டமும் நடையுமாக வியாபாரிகள் போட்டிருந்த கூடாரங்களுக்குவந்து சேர்ந்தான். அங்கே அவன் வேலை செய்த நங்கூரான் கூடாரத்துக்குப் போய் அங்கே சமைத்திருந்த கூழையும், மோரையும் ஒரு மண் பாண்டத்தில் எடுத்துக் கொண்டான். நங்கூரானுக்காகக் கொண்டு வந்திருந்த பழங்கள் சிலவற்றையும் எடுத்துக் கொண்டான். கிருஷ்ணாயி ஒளிந்திருந்த தாழைப்புதருக்குத் திரும்பி வந்தான். பையன் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கூழில் மோரை விட்டுக் கரைத்து அவனுக்குச் சிறிது சிறிதாகப் புகட்டினான். கிருஷ்ணாயியைப் பழங்களை எடுத்துக்கொள்ளச் சொன்னான். பையன் கண்களில் சற்றே உயிர் வந்தது. அவன் பார்வை முன்னை விடத் தெளிவு பெற்றது.கிருஷ்ணாயிக்கு அதைக் கண்டதும் கண்ணீர் பெருகிற்று! எப்படி இருந்த பிள்ளை! அதற்குள்ளாகக் குலசேகரன் அவளிடம்,"இங்கேயே ஒளிந்திருங்கள் மஹாராணி! நான் சென்று நல்ல யோசனை செய்து உள்ளே நுழைய ஒரு வழி கண்டு பிடித்துக் கொண்டு வருகிறேன்.ஒருவேளை நான் வர நாளை இரவு ஆனாலும் ஆகலாம். ஆனாலும் நீங்கள் கவலைப்படாமல் வேறு எங்கும் செல்லாமல் இங்கேயே ஒளிந்திருங்கள்!" என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் மனதில் இங்கிருந்து அவர்களைக் கோட்டைக்குள் கொண்டு செல்வது எப்படி என்னும் எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இந்த வியாபாரிகள் இன்னும் சிறிது காலம் இங்கே தான் இருப்பார்கள். ஏனெனில் சுல்தானிய வீரர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்க வேண்டும். இந்த வீரர்கள் எங்கெல்லாம் செல்கின்றனரோ அங்கெல்லாம் இந்த வியாபாரிகளும் சென்று பொருட்களை வாங்கி விற்க வேண்டும். சுல்தானிய வீரர்கள் தங்கள் உணவைத் தாங்களே தான் சமைத்துக் கொள்ள வேண்டும்  என்பது அவர்களுடைய விதி! ஆகவே இந்த வியாபாரிகள் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

1 comment:

Anuprem said...

ஒரு வழியா அந்த குழந்தைக்கு உணவு கிடைத்தது ...