எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, March 14, 2019

கிருஷ்ணாயி காப்பாற்றப் பட்டாள்!

மறுநாள் இரவில் மூன்று பெரிய கூடையுடன் குலசேகரன் தன் ஆட்களுடன் அங்கே வந்து சேர்ந்தான். கோட்டை வாசலில் கீழே இருந்து குலசேகரன் ஆட்களுக்கும், மேலே இருந்த கோட்டைக்காவலர்களுக்கும் இடையே பேரம் நடைபெற்றது. பின்னர் கோட்டைக்காவலர்கள் மேலே இருந்து கூடைகளைக் கீழே இறக்கினார்கள். அதிலே நிறையப் பொற்கட்டிகள், காசுகள், ஆபரணங்கள் இருக்கவே அந்தக்கூடையைத் தன் சகாக்களிடம் கொடுத்து நங்கூரானிடம் கொண்டு சேர்ப்பிக்கச் சொல்லிக் குலசேகரன் அவர்களை முதலில் அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.  அவர்கள் சென்றதும் குலசேகரன் மெதுவாகத்தன்னிடம் இருந்த கூடைக்குள்ளிருந்த கிருஷ்ணாயியைக் கோட்டையிலிருந்து இறங்கிய கூடைக்குள் அமர வைத்து மேலே உள்ளவர்களை இழுக்கும்படி சைகை காட்டினான். அவர்களும் மேலே இழுத்தார்கள். பின்னால் இளவரசனையும் உட்கார்த்தி வைத்து மேலே இழுக்க வைத்த குலசேகரன் கடைசியில் தானே அமர்ந்து கொண்டு தன்னையும் மேலே இழுக்கச் சொல்ல அவனும் மெல்ல மெல்ல கோட்டைக்குள் சென்றுவிட்டான்.

நகரம் முழுவதும் ராணியும் இளவரசனும் காப்பாற்றப் பட்ட செய்தியும் இருவரும் பத்திரமாகக் கோட்டைக்குள் வந்து சேர்ந்த செய்தியும் பரவி எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது. ஆனால் முற்றுகை அதனால் முற்றுப் பெறவில்லை. மேலும் ஒரு வாரம் நீடித்தது. இப்போது கையிருப்புப் பொருட்களும் குறைய ஆரம்பிக்க மக்கள் உணவுக்காகப் பரிதவித்தார்கள். எல்லோருடைய பொறுமையும் பறி போயிற்று. எங்கும் பதட்டமும் குழப்பமும் நீடிக்க, ஹொய்சள மன்னர் இனிப் பொறுக்க முடியாது என்னும் நிலைமை வந்ததும் கோட்டையைத் திறந்து கொண்டு எதிரிகளைத் தாக்குமாறு படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். ஹொய்சளர்கள் "ஓ" என இரைந்து கொண்டு கோட்டை வாசலைத் திறந்து கொண்டு வெளியே வந்து சுல்தானியப் படை வீரர்களை மிக உக்கிரமாகத் தாக்கத் தொடங்கினார்கள். ஓர் மாபெரும் யுத்தம் தொடங்கியது.

முதல் இரண்டு நாட்கள் சுல்தானிய வீரர்களுக்கும், ஹொய்சளர்களுக்கும் சமமான சேதங்கள் விளைந்தன.மூன்றாம் நாள் தாக்குப் பிடிக்க முடியாத ஹொய்சளர்கள் சேதங்களை அதிகம் அனுபவித்தனர். ஆகவே தங்கள் முழு பலத்தோடும் மறுநாள் போரிட ஆரம்பித்தார்கள். போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இரு தரப்பும்  பகல் முழுவதும் சமபலத்துடன் காணப்பட்டார்கள். ஆனால் நேரம் ஆக, ஆக ஹொய்சளர்களின் பலம் குறைய ஆரம்பித்தது. அவர்கள் தரப்பில் சேதம் அதிகம் ஆயிற்று. வீரர்கள் சிதறி ஓடத் துவங்கினார்கள். ஆனால் சுல்தானியர்கள் பக்கமோ சுல்தான் உத்தௌஜியே நேரில் வந்து விட்டான். யானை மீது ஏறிக் கொண்டு வந்து உற்சாகத்துடன் சண்டையை நடத்திக் கொண்டிருந்தான். தங்கள் சுல்தானை நேரில் கண்ட சுல்தானிய வீரர்கள் மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் போராட ஆரம்பித்தனர். சுல்தானியர்கள் பக்கம் வெற்றி குவிய ஆரம்பித்தது.  ஹொய்சளர்கள் பின் வாங்க ஆரம்பித்தனர். இந்தச் செய்தி நகர் முழுவதும் பரவ ஆரம்பிக்கவே உயர்குடிப் பெண்கள் யாவரும் தீக்குளித்து உயிர் விடச் சித்தமானார்கள். மக்கள் அங்கும் இங்குமாக ஓடி அலை பாய்ந்தார்கள்.

நிலைமை மோசமாவது குலசேகரனுக்குப் புரிந்தது. மனம் துடித்துப் பரிதவித்துக் கொண்டு இருந்தான். இந்தப் போர் ஓர் முக்கியமான போர் என்பதோடு திருவரங்கன் நிலையையும் திருவரங்கத்தின் நிலையையும் இந்தப் போர் மூலம் தான் சரி செய்ய முடியும் என்பதையும் குலசேகரன் அறிந்திருந்தான். ஹொய்சளர்கள் மட்டும் தோற்று விட்டால் தமிழ் நாட்டுக்கு இப்போது விமோசனம் இல்லை. அரங்கன் கதியும் அதோ கதி தான்! மக்கள் நிலையைச் சொல்லவே வேண்டாம். ஆகையால் ஏதேனும் செய்து சுல்தானிய வீரர்களை முறியடிக்க வேண்டும்.  ஆனால் என்ன செய்வது?யோசனையில் மூழ்கினான் அவன். சட்டெனஓர் தீர்மானத்திற்கு வந்தான். போரின் வெற்றியையோ, தோல்வியையோ நிர்ணயிப்பது அந்தப் போர் நடக்கும் நாட்டின் மன்னனின் உயிரை வைத்துத் தான். போர் நடக்கையில் மன்னர்கள் யானை அல்லது குதிரை மீது அமர்ந்து போர்க்களம் வந்தாலும் அவர்களுக்குத் தக்க பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். அதையும் மீறித்தான் அவர்களைத் தக்கவேண்டும். போர் எப்படி நடந்தாலும் ஒரு தரப்பின் மன்னன் கொல்லப்பட்டால் உடனே வீரர்கள் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தாங்கள் தப்ப வழி பார்ப்பார்கள். ஆகவே குலசேகரன் எதிரி சுல்தானைக் கொல்வதே போரில் ஜெயிக்க ஒரே வழி எனத் தீர்மானித்தான்.

தனக்கு உதவியாகப் பத்து வீரர்களை அழைத்துக் கொண்டான்.  சுல்தானைக் குறி வைத்து அவர் போகும் இடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தான். ஒரு நேரம் சுல்தான் போர் வெறியுடன் வெற்றிக் களிப்புடன் முன்னேறி வருவது தெரிந்தது. புயலைப் போல் வேகமாக ஓடோடி வந்த குலசேகரன் கண் இமைப்பதற்குள்ளாக சுல்தானைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருந்த எதிரி வீரர்களிடையே மின்னலைப் போல் புகுந்தான். இரு சாரிகளிலும் சரமாரியாக வீரர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டே சுல்தான் உத்தௌஜியை நெருங்கி விட்டான்.  சுல்தானை நெருங்கியவன் தன்னுடைய கோபத்தை எல்லாம் திரட்டித் தன் ஈட்டி மேல் பாய்ச்சி மிகுந்த உத்வேகத்துடன் அந்த ஈட்டியை சுல்தான் மேல் வீசி எறிந்தான். சுல்தான் உடலில் ஆழமாகப் புகுந்தது அந்த ஈட்டி! சுல்தான் உயிரற்றுக் கீழே விழுந்தார்.  வெறி பிடித்தவன் போல் கூவிக்கொண்டு குலசேகரன் தன் வாளைச் சக்கரவாளமாகச் சுழற்றிக் கொண்டு போர்க்களத்தில் இங்கும் அங்குமாக அலைந்தான். 

1 comment:

Anuprem said...

திக் திக் நிமிடங்கள்