எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, March 27, 2019

ஹொய்சளம் வென்றது!

சுல்தானைக் கீழே வீழ்த்திய பின்னர் குலசேகரன் வெறி கொண்டவனைப் போல் வாளைச் சுழற்றிக்கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தான். எங்கும் சுல்தான் கீழே விழுந்த செய்தி பரவ சுல்தானியப் படை வீரர்கள் மன வலிமை குறைந்து மெல்லப் பின் வாங்க ஆரம்பித்தனர். படையின் ஒழுங்கு குலைந்து சின்னாபின்னமாகி ஓட ஆரம்பித்தனர்.  ஹொய்சளர்கள் ஜயகோஷம் எழுப்பினர்.  இந்தப் போர் நடந்தது கி.பி. 1314 ஆம் ஆண்டில். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போர் ஆகும்.  இதற்குச் சரியாகப் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் தான் அரங்கம் முற்றுகைக்கு உள்ளாகி அரங்கன் ஊர் ஊராய்த் திரிய ஆரம்பித்திருந்தான்.  அதன் பின்னர் எதிரிகள் மீது நடத்திய முதல் தாக்குதல் இது! உள்ளே உண்ண உணவு இல்லாநிலையில் ஹொய்சளர்கள் நடத்திய இந்தப் போரில் அவர்கள் வெளியே வரவில்லை எனில் உள்ளேயே பட்டினியில் இறந்திருக்க நேரிட்டிருக்கும். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் உடல் சோர்வாலும், மனச்சோர்வாலும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயம் பார்த்துக் குலசேகரன் வெறியோடு சுல்தான் மேல் பாய்ந்து அவனைத் தாக்கவில்லை எனில் ஹொய்சளர்களுக்கே தோல்வி நிச்சயம் கிட்டி இருக்கும்.  அந்த நாட்களில் தலைவனின் தலைமை நேரடியாகக் கிடைத்தால் தான் வீரர்கள் உற்சாகத்துடன் போரிடுவார்கள். தலைவன் முறியடிக்கப் பட்டாலோ, அல்லது கொல்லப் பட்டாலோ வீரர்கள் கலக்கமடைந்து சிதறி ஓடி விடவே முயற்சி செய்வார்கள்.  ஆகவே இப்போது சுல்தான் இறந்ததும் ஓடிய சுல்தானிய வீரர்களை ஹொய்சள வீரர்கள் துரத்திச் சென்று பல்வேறு திசைகளிலும் வெகு தூரத்துக்கு விரட்டிய பின்னரே தங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.  அந்தத் துரத்தல் கோஷ்டியில் குலசேகரனும் இருந்தான். அவனும் வெகு தூரத்துக்கு சுல்தானிய வீரர்களை விரட்டித் தள்ளி விட்டுப் பின்னர் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.  அது ஓர் அந்திமாலைப் பொழுது. மாலை மெல்ல மெல்ல மயங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாயிலில் நெருக்கமாக வாழைக்குலைகளும் தோரணங்களும், கொடிகளும் கட்டப்பட்டுக் கோட்டைச் சுவர் எங்கும் ஜகஜ்ஜோதியாக தீபங்கள் ஏற்றப்பட்டுப் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தன.

குலசேகரனும் அவனுடன் சென்றவர்களும் கோட்டை வாசலில் நுழைந்ததுமே, "ஜய விஜயீ பவ!" என்னும் கோஷம் அனைவர் தொண்டையிலிருந்தும் எழுந்து பெரிய அளவில் அந்த கோஷம் எங்கும் எதிரொலித்தது.  ராஜவீதியெங்கும் விளக்குகள் ஒளிமயமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. உடனே எங்கிருந்தோ வாத்திய முழக்கம் கேட்க மேள தாளங்கள் முழங்க ஆரம்பித்தன.  குலசேகரனை நடுவில் விட்டுக்கொண்டு சுற்றிலும் வீரர்கள் சூழ்ந்து வர மெல்ல மெல்ல ஓர் பவனி துவங்கியது. வீதியின் இருமருங்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் எனக் கூட்டமாய்க் கூடி நின்று ஆரவாரம் செய்து  குலசேகரனை வரவேற்றார்கள். வாழ்த்தொலி எழுப்பினார்கள்.  எங்கும் மகிழ்ச்சி விரவிக் கிடந்தது. குலசேகரன் ஓர் சிங்கம் போல் கம்பீரமாக வீதி வலம் வந்தான்.  அவன் மனதுக்குள் பற்பல எண்ணங்கள்.

சற்று நேரம் முன்னர் இந்த நகரம் காட்சி கொடுத்த விதம் என்ன?  ஒரே சோக மயமாய்க் காட்சி கொடுத்ததே! மக்கள் முகத்தில் பயக்களை தாண்டவமாடியதே! அனைவருமே ஓர் சொல்லொணா பீதியில் உறைந்திருந்தனரே! பெண்கள் சுல்தானியரிடம் அகப்பட்டுக்கொண்டு சீரழியாமல் இருக்க வேண்டி தங்களைத் தீயில் இட்டுக்கொள்ளவும் சித்தமாக இருந்தனரே! அந்தக் காட்சிகள் எல்லாம் இப்போது கலைத்துப் போட்ட சித்திரமாக அனைத்தும் காணாமல் போய் இப்போது புதுச்சித்திரம் எழுதப்பட்டாற்போல் மாற்றம் கண்டு விட்டது. எல்லாவற்றிற்கும் அரங்கன் அருளே காரணம்! இவ்விதமெல்லாம் நினைத்த வண்ணம் குலசேகரன் அந்த நகரின் எல்லாத் தெருக்களிலும் பவனி வந்தான். பிரதான வீதி வந்ததும் அரண்மனை வாயில் வரை அவனைக் கொண்டு போய் விட்டனர் மக்கள். அரண்மனை வாயிலில் வயதானாலும் மிடுக்குக் குறையாமல் இருந்த வீர வல்லாள தேவர் மிகுந்த பெருமிதத்துடனும், மனம் கொள்ளாப் பூரிப்புடனும் குலசேகரனை வரவேற்கத் தயாராய் நேரில் அவரே வந்திருந்தார்.  குதிரையை விட்டுக் குலசேகரன் இறங்கியது தான் தாமதம் மன்னர் தாமாகவே முன் வந்து கையில் கொண்டு வந்திருந்த மாலையைக் குலசேகரனுக்கு அணிவித்தார்.

எங்கும் வாழ்த்தொலிகள் முழங்க, அந்தக் கோஷத்துக்கிடையே மன்னர், "குலசேகரன்  இனிமேல் நம் தண்டநாயகர்களில் ஒருவர்!" என மகிழ்வோடு அறிவித்தார்.  குலசேகரன் தலையை அசைத்துத் தன் மறுப்பைத் தெரிவித்தான். தான் அதற்கெல்லாம் தகுதி வாய்ந்தவன் அல்ல என்று பணிவோடு எடுத்துச் சொன்னான். அதற்கு மன்னர், "வீரனே! உன் திறமையைக் குறைத்து மதிப்பிடாதே! முதலில் என் பட்டத்து மஹாலக்ஷ்மியைக் காப்பாற்றிக் கொடுத்தாய்! எவ்விதமான சேதமும் இல்லாமல் அவள் திரும்பி வந்தாள். இப்போதோ என் ராஜ்ய லக்ஷ்மியையே நீ காப்பாற்றிக் கொடுத்து விட்டாய்! உனக்கு இந்தப் பதவியை எல்லாம் விட மிக உயர்ந்த பதவியையே கொடுக்க வேண்டும். நீ இந்தப் பதவிக்கு மிகவும் ஏற்றவன். ஆகவே இதை ஏற்றுக் கொள்!" என்றார்.

குலசேகரன் மன்னனிடம், "தங்கள் அளவு கடந்த அன்புக்கு நன்றி மன்னா!  இந்தப் பதவியை நான் ஏற்றாலும் இங்கே என்னால் ராஜ சேவகத்திலேயே நிலைத்து நிற்க முடியாது! ஏனெனில் நான் கொண்ட லக்ஷியம் அப்படி! என் லக்ஷியம் என் அரங்கனுக்குச் சேவகம் செய்வதே! அவனைக் காப்பாற்றி மீண்டும் திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பதே! இப்போது அரங்கன் மேல்கோட்டையில் இருப்பதாகத் தெரிகிறது! அங்கிருந்து அவனை எப்படியேனும் திருவரங்கம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆகவே உங்கள் படைத்தலைவனாக உங்களுக்கு ஊழியம் செய்து கொண்டு  இங்கே என்னால் நிலைத்திருக்க முடியாது!" என மிகப் பணிவாக எடுத்துக் கூறினான். அதைக் கேட்ட ஹொய்சள மன்னன் மெல்லச் சிரித்தார்.

"வீரனே! எனக்கு மட்டும் அந்த லக்ஷியம் இல்லையா என்ன? எனக்கும் அரங்கனைத் திரும்பக் கொண்டு வருவதே லக்ஷியம்! இது என் முதல் கனவு! அதன் பின்னர் மதுரையைக் காப்பாற்றி சுல்தானியரிடமிருந்து மீட்க வேண்டும். இது என் இரண்டாவது கனவு.  அதன் பின்னர் தென்னாடுகள் அனைத்தையும் ஒரே குடைக்குக் கீழ் கொண்டு வர நினைக்கிறேன். இது என் மூன்றாம் கனவு.  இவை எல்லாமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவையே குலசேகரா! ஆகவே நீ உன் லக்ஷியத்தை நிறைவேற்றத் தடை ஏதும் இருக்காது. மாறாக உனக்கு வேண்டிய உதவிகளையே நான் செய்து தருவேன்!" என்றார்.

2 comments:

நெல்லைத்தமிழன் said...

படிக்கவே மனதுக்குக் கஷ்டமான பகுதிகள். சமீபத்தில்தான், 'திருவரங்கத்தில் 12000 பேர் கோவிலைக் காக்க மரணித்த நாள்' என்று வந்திருந்தது.

Anuprem said...

அடுத்து என்னவாகும் ...

ஆவலில் காத்திருக்கிறேன் ...