எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 16, 2019

வண்டி புறப்பட்டது!

தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே! என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குடையை எடுத்து வந்தான். வல்லபனுக்கு எதுவும் சரியாகப் புரியாவிட்டாலும் தத்தன் எதையோ மறைக்க இப்படி வளவளவெனப் பேசுகிறான் என்றவரை புரிந்து கொண்டான். சற்று நேரம் அந்தக் கூடத்திலே ஒரே பேச்சு சப்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் ஒருங்கே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.  சேவகர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றிருக்க அவர்கள் தலைவன் கோபமாகக் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். தத்தன் அவனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் வல்லபன் அருகே வந்தான். பின்னர் அனைவருமே அமைதியைக் கடைப்பிடித்துக் கொண்டு அவரவர் நண்பர்களுடன் சேர்ந்து மெல்லப் பேசிக் கொண்டும் படுக்க ஆயத்தங்கள் செய்து கொண்டும் இருந்தனர்.

இதை எல்லாம் பார்த்த வல்லபன் தானும் படுக்கலாமா என எண்ணியபோது தத்தன் அவனைத் தனியாகக் கண் ஜாடை செய்து அழைத்தான். இருவரும் சற்றே மறைவாகத் தனியாகப் போய் அமர்ந்தனர். அப்போது காலதத்தன் தான் அந்தச் சத்திரத்துக் குளியல் அறையில் இருந்த புகை போக்கி மூலம் வெளியே தப்பியதாகச் சொன்னான்.பின்னர் ஓட்டமாக ஓடியதில் எதிரே வந்த யாத்ரிகர்கள் கண்களில் பட்டதாகவும் அவர்களிடம் இந்த வீரர்களையும் அவர்கள் பிடித்து வைத்திருக்கும் பெண்ணையும் பற்றிச் சொன்னதோடு அல்லாமல் தங்களுக்கும் ஆபத்து நேர்ந்திருப்பதாகவும் வல்லபன் அங்கே தனியாக மாட்டிக்கொண்டதாகவும் தான் மட்டும் தப்பி வந்து உதவி கேட்க வந்ததாகவும் தெரிவித்ததாய்ச் சொன்னான். அதைக் கேட்டே அந்த யாத்ரிகர்கள் சத்திரத்துக்குள் நுழைந்ததாகவும் சொன்னான். இதை எல்லாம் கேட்ட வல்லபனுக்கு நன்றியால் கண்களும் மனமும் நிறைந்தது. ஆனால் தத்தனோ அவனைப் பார்த்து எச்சரிக்கும் குரலில், "வல்லபா! இனியாவது இப்படி முன்பின் யோசியாமல் இது போன்ற சங்கடங்களுக்குள் மாட்டிக் கொள்ளாதே!அதோடு இல்லை தம்பி! என்னையும் என் துணையையும் நம்பித்தான் உன் தாயார் உன்னை என்னோடு அனுப்பி இருக்கிறார். ஆகவே நீ நான் சொல்லுவதைக் கேட்டு அதன்படி நடந்து கொள்! நீயாக எந்த முடிவும் எடுக்காதே! நூறு எண்ணுவதற்குள்ளாகத் திரும்பி வா என உன்னிடம் சொல்லி இருந்தேன். ஆனால் நீயோ! வராமலே இருந்ததோடு அல்லாமல் என்ன செய்து உன்னைக் காப்பாற்றுவது என்று என்னைக் கவலையில் ஆழ்த்திவிட்டாய்!" என்று குற்றம் சாட்டும் தொனியில் கூறினான்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. காலதத்தனும், வல்லபனும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துப் பிரயாணத்துக்குத் தயார் ஆனார்கள். பின்னர் வெளியே வந்தார்கள். வெளியே நேற்றுப் பார்த்தக் கூண்டு வண்டிகள் பிரயாணத்துக்குச் சித்தமாகத் தயார் செய்யப்பட்டிருப்பதையும், காவல் வீரர்கள் அனைவரும் வந்து விட்டதையும், இன்னமும் அந்த இளம்பெண்ணும், அவள் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதிய பெண்ணும் தான் வரவில்லை என்பதை இருவரும் அறிந்தார்கள். இவை எதிலும் பார்த்துத் தன் கண்களையும் மனதையும் பறி கொடுத்து வந்த காரியத்தை வல்லபன் மறந்து விடப் போகிறானே என தத்தன் கவலைப்பட்டான். அப்போது சத்திரத்துக்குள்ளிருந்து அந்தப் பெண்ணும் அவளுக்குத் துணைக்கு இருக்கும் பெண்ணும் வருவதை இருவரும் கண்டனர். அந்தப் பெண் நடந்து வருவதே ஓர் அழகான அபிநயம் போல் இருந்தது வல்லபனுக்கு. மிக அழகாக ஒசிந்து ஒசிந்து அவள் வருவதையே தன்னை மறந்து பார்த்த வல்லபனுக்குச் சட்டெனத் தூக்கிவாரிப் போட நேற்று தத்தன் சொன்னதை எல்லாம் நினைவு கூர்ந்தவனாகச் சட்டென முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு திரும்பியவாறு நின்று கொண்டான்.

அப்போது அந்தப் பெண் வல்லபனைத் திரும்பிப் பார்த்து ஏதோ சொல்ல நினைத்தவள் போல் நின்றாள். பின்னர் வல்லபன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டவள் போல் காணப்பட்டாள். அவள் விழிகளின் காந்தியும் நீண்ட அந்த விழிகளில் தெரிந்த தன் உருவமும் பார்த்துப் பித்துப் பிடித்தவன் போல் ஆனான் வல்லபன். ஆனால் அந்தப் பெண் சட்டெனத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு வண்டிக்குப் போய் அதிலே ஏறிக்கொண்டாள். வண்டியில் அமர்ந்தவள் சற்று நேரம் பார்வையைக் கீழேயே தாழ்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ தன் இடக்கை விரல்களால் அபிநயம் பிடித்த வண்ணம் தன் ஒரு கண்ணைச் சுற்றி இரு கோடுகள் வரும்படி செய்து காட்டினாள். பின்னர் ஐந்து விரல்களாலும் கழுத்தையும் சுற்றி நீவி விட்டுக்கொண்டாள். கையை மடித்து நெற்றியிலே வைத்து அழுத்தியவண்ணம் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். அப்போது வீரர்களில் ஒருவன் வந்து திரைச்சீலையை எடுத்துக் கட்ட ஆரம்பித்தான், அதை முழுதும் மூடுவதற்குள்ளாக அந்தப் பெண் வல்லபனை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். சற்று நேரத்தில் திரைச்சீலை முற்றிலுமாக அந்தப் பெண்ணின் முகத்தை மறைத்துவிட வீரர் தலைவனும் அவர்களை அலட்சியமாகப் பார்த்த வண்ணம் குதிரையை விரட்டினான். வண்டி புறப்பட்டது!

No comments: