எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, July 06, 2019

இருளில் ஓர் சப்தம்!

வல்லபனுக்குக் கண்ணீர் ததும்பியது. இந்த நேரம் பார்த்து தத்தன் போன இடம் தெரியவில்லையே! நாம் ஒன்றுமே சொல்லாதபோது, எதுவுமே செய்யாத போது தூக்குத் தண்டனை வழங்குகிறானே இந்த வீரர் தலைவன். இதை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லையா? என்றெல்லாம் யோசித்து மனதைக் குழப்பிக் கொண்டான். கணபதி என்னும் அந்த வீரனோ உத்திரத்தில் இருந்து கயிற்றைக் கட்டித் தொங்கவிடும் பணியில் மும்முரமாக இருந்தான். அதைப் பார்த்த வல்லபனின் நெஞ்சம் மேலும் கலங்கியது. தத்தனை மீண்டும் காணாமலேயே தான் இறக்கப் போகிறோம் என்பதை நினைத்து அவன் மனம் விம்மியது. இனி என்ன செய்வோம் என்று குழப்பத்தில் ஆழ்ந்தான். அவன் மனக்கண்ணில் வாசந்திகாவின் சோகமான முகம் நினைவில் வந்தது. ஆஹா! தன் தாய் தான் தன்னிடம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள்? தகப்பன் விட்டுச் சென்ற பணியை முடிக்கத் தானே என்னை அனுப்பி வைத்தாள். ஆனால் நானோ பாதி தூரம் கூடச் செல்லவில்லை. அதற்குள்ளாக உயிரை இழக்கப் போகிறேன். அம்மா, அம்மா! என் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையை எல்லாம் நான் மோசம் செய்துவிட்டேனே! நீங்கள் எனக்குக் கொடுத்திருந்த எச்சரிக்கைகளையும் மீறி விட்டேனே! உங்கள் புத்திமதியைப் பின்பற்றி இருந்தேனானால் இத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்காதே! என்றெல்லாம் மனதுக்குள்ளேயே புலம்பினான் வல்லபன்.

அதற்குள்ளாக எங்கிருந்தோ ஓர் ஏணியைக் கொண்டு வந்த அந்த வீரன் உத்திரத்தில் கெட்டியான ஒரு கயிற்றைக் கட்டி அதில் கீழே தொங்கும் இடத்தில் நல்ல கனமான சுருக்கையும் போட்டு முடித்தான். வல்லபன் அருகே வந்து அவனைப் பார்த்து, "ம், நட முன்னால்!" என்று சொல்லியவண்ணம் அவனை நடத்தினான். அவனைப் பிணைத்திருந்த கயிற்றையும் அவிழ்த்துவிட்டான். வல்லபன் தன் நிலையை நினைத்துக் கண்ணீர் சொரிந்தான். தலையை நிமிர்த்தி எங்கானும் தத்தன் தென்படுகிறானா என அங்குமிங்கும் பார்த்தபோது முன்னர் பார்த்த சாளரத்தின் வழியாக அந்த இளம்பெண்ணின் முகம் பயத்தில் வெளிறிக் காணப்பட்டது. ஆஹா! இத்தகையதொரு பெண்ணின் முன்னால் அல்லவோ எனக்கு இந்த துர்க்கதி ஏற்பட்டு விட்டது வீரமில்லாதவன் என்றல்லவோ அந்தப் பெண் என்னை நினைத்திருப்பாள்? இதிலிருந்து தப்ப வழி தெரியாமல் மரணத்தை அல்லவோ நாம் இப்போது ஏற்கப் போகிறோம். இவ்வாறெல்லாம் எண்ணிய வல்லபன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பின்னர் ஏதோ தோன்றியவனாக வீரர் தலைவனைப் பார்த்தான்.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம், தான் எந்தத் தவறும் செய்யாதிருக்கையில் தனக்கு இத்தகைய மரண தண்டனை விதிப்பது அபாண்டம் என்றும் தன்னை விடுவிக்குமாறும் கேட்டான். அதற்கு அந்த வீரர் தலைவன் அவன் ஒரு குற்றம் மட்டும் செய்யவில்லை. பல குற்றங்கள் செய்திருப்பதாகச் சொன்னான். சத்திரத்துக்குள் வந்ததே தப்பு என்றும் அப்படி வந்ததும் அல்லாமல் விளக்கையும் அணைத்துவிட்டு அவர்களுடன் போரிட முயன்றது இன்னொரு குற்றம் என வரிசையாக அவன் குற்றங்களை அடுக்கினான். இதற்காகத் தனக்கு மரண தண்டனையா கொடுக்க வேண்டும் என வல்லபன் மீண்டும் கேட்டான். அவனை வெறுப்புடன் பார்த்தான் வீரர் தலைவன். இங்கே நீதி, நியாயம், நேர்மைக்கு எல்லாம் இடமும் இல்லை. அது பேசும் சமயமும் இதுவல்ல என்ற வீரர் தலைவன் கணபதி என்னும் அந்த வீரனுக்கு மீண்டும் ஜாடை காட்டி வல்லபனை இழுத்துப் போகச் சொன்னான். வல்லபன் என்ன நினைத்தானோ தான் தன் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுக் கீழே அமர்ந்து கொண்டு கூரத்தாழ்வார் அருளிச் செய்த சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தான்.

வீரர் தலைவனுக்கு ஆத்திரம் பொங்கியது. இதெல்லாம் என்ன நாடகம் எனக் கூறிக்கொண்டு அவன் வல்லபன் மேல் பாய்ந்தான். அவன் தலைமுடியைப் பிடித்து உலுக்கி அவனை எழுப்பப் பார்த்தான். அப்போது வாயிலுக்குச் சற்றுத் தொலைவில் இருந்து ஏதோ விசித்திரமான சப்தம் எழுந்தது. "கூவேகூ" என்று ஏதோ கூவிய மாதிரிக் கேட்டது. ஆனால் குரல் மனிதக் குரல் மாதிரி இல்லாமல் அமானுஷ்யமாகத் தொனித்தது. வீரர் தலைவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதுவும் அந்தக் குரல், அந்தச் சப்தம் அந்தப் பிரதேசம் முழுதும் பரவி எதிரொலிக்கவும் செய்தது. என்ன விபரீதமோ எனக் கலங்கிவிட்டான் வீரர் தலைவன். மற்ற வீரர்களும் அந்த சப்தத்தைக் கேட்டுவிட்டு அங்கே வர அனைவரும் வெளி வாயிலையே பார்த்தார்கள்.

No comments: