எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, July 13, 2019

காலதத்தன் திரும்பி வந்தான்!

அந்தப் பெண் படுத்திருந்த கோலத்தைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. அனைவரும் உள்ளே சென்ற சப்தத்தில் கூட அவள் கண் விழிக்கவோ எழுந்து பார்க்கவோ இல்லை. கூட வந்த சேவகன் அந்தப் பெண்ணின் அருகே சென்று மெள்ளக் குரல் கொடுத்தான். "அம்மா! அம்மா!" என இரு முறை அவன் விளித்தும் அந்தப் பெண்ணின் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. இன்னமும் அருகே சென்று கொஞ்சம் குரலை உயர்த்திக் கூப்பிட்டான். ம்ஹூம்! அப்போதும் அவள் கண் விழிக்கவில்லை. இளம்பெண்ணை எப்படித் தொட்டு உலுக்கி எழுப்புவது? அதுவும் உயர்குலத்துப் பெண்ணாக வேறே தெரிகிறாளே! அனைவரும் யோசிக்கையிலேயே அந்த வீரன் மேலும் குரலை உயர்த்திப் பல முறை அவளை எழுப்பினான். ஒரு வழியாக அந்தப் பெண் மெல்லத் தன் கண்களைத் திறந்தாள். என்றாலும் அவளால் முழுதும் திறக்க முடியவில்லை. கண்களை மெல்ல மெல்ல உயர்த்தி அவர்களைப் பார்த்தாள்.  அப்போது அந்த வீரர் தலைவன் அவளிடம், "அம்மணி! நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள இவர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். தாங்கள் யார் என்பதைத் தயவு செய்து இவர்களீடம் சொல்லுங்கள்." என வீரர் தலைவன் அவளிடம் சொன்னான்.  அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ பேசவே இஷ்டமில்லாதவள் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டாள். கண்களை வேறே மூடி மூடித் திறந்தாள். பின்னர் ஒருவாறு வாயைக் கூட்டிக்கொண்டு, "நா" என்றாள். பின்னர் "ஹாகு" "தேமு" என்றெல்லாம் ஏதேதோ புரியாத மொழியில் சொன்னாள். சேவகத் தலைவன் அவளிடம் அவள் சொல்லுவது அவர்களுக்குப் புரியவில்லை என்பதால் விளக்கமாகச் சொல்லும்படி மீண்டும் கேட்டான். அப்போதும் அந்தப் பெண் ஏதும் விபரமாகப் பேசாமல் துண்டு துண்டாக வார்த்தை, வார்த்தைகளாகவே ஏதேதோ புரியாத மொழியில் சொன்னாள். வீரர் தலைவன் முகத்தில் நிம்மதி தெரிந்தாற்போலிருந்தது வல்லபனுக்கு. அனைவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தான் வீரர் தலைவன். "நான் சொன்னேனே! கேட்டீர்களா? அந்தப் பெண்ணிற்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது! கண்டபடி உளறுகிறாள் பாருங்கள்!" என்று சொன்னான் வீரர் தலைவன். வல்லபன் எதுவுமே புரியாமல் விழித்தான். வந்திருந்த புது யாத்ரிகனோ, "ஆம், ஆம், பைத்தியம் தான் பிடித்திருக்கிறது! உன்மத்தம்!" என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு ராஜவல்லபனை நோக்கிச் சிரித்தான்.

"தம்பி, இப்படியாத் தவறாக நினைப்பது? ஒரு நிமிடத்தில் எங்கள் எல்லோரையுமே குழப்பி விட்டாயே! ஓர் பைத்தியக்காரப் பெண்ணை இவர்கள் விலங்கு பூட்டி ஜாக்கிரதையாக எவருக்கும் தீங்கு நேராமல் சிவிகையினுள்ளே அமர்த்திக் காவலுக்கு ஒரு பெண்மணியையும் போட்டு அழைத்துச் செல்கின்றனர். இதில் என்ன தவறு கண்டாய், இளைஞனே! அநியாயமாகச் சந்தேகப்பட்டு விட்டாய்!" என்று சொன்னான் அந்தப் புதியவன். பின்னர் வீரர் தலைவனிடம், "ஐயா! உம்மையும் உமது காரியத்தையும் குறித்து இவன் கொண்ட சந்தேகம் தவறானதே! அதனால் தான் இத்தனை விபரீதங்கள் நேர்ந்திருக்கின்றன. ஆனாலும் இவனை நீங்கள் நியாயப்படி பார்த்தால் தண்டிக்கக் கூடாது! சந்தேகத்தின் பேரில் செய்த தவறு அல்லவா? அதற்கு மன்னிப்பும் உண்டே!" என்றான். ஆனால் வீரர் தலைவன் அதை ஒத்துக்கொள்ளவில்லை. ஆவேசமாக மறுக்க புதியவனும் வீரர் தலைவனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடைசியில் அலுத்துப் போன புதிய யாத்ரிகன் வீரர் தலைவனைப் பார்த்து, "நீர் எந்த நாட்டவர் ஐயா?" என வினவ, தான் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன் என வீரர் தலைவன் கூறினான். அதற்குப் புதியவன், "சரிதான்! சம்புவராயரின் நாட்டிலிருந்து வருகிறீர்கள் போலும்! ஆனால் இது கொங்கு நாடு! தெரியுமா? இதை ஆள்வது யாரென்று அறிவீர்களா? " என்று புதியவன் வீரர் தலைவனிடம் கேட்டான். அதற்கு வீரர் தலைவன், "ஏன், மதுரை சுல்தானின் ஆட்சி தான் இங்கு வரை நீண்டு விட்டதே!" என மறுமொழி கொடுத்தான். உடனே புதியவன், "ஆஹா! வீரரே! அதை நீர் நினைவில் வைத்துக் கொள்ளும்! உம் தொண்டைமண்டலத்தின் சட்டதிட்டங்கள், நியாய அநியாங்கள் இங்கே செல்லாது. நீர் நிற்பது உம் தொண்டை நாடல்ல. மதுரை சுல்தானுக்கு உட்பட்ட ராஜ்ஜியம்! இங்கே நீங்களாக ஏதேதோ முடிவு செய்து நியாயம் என நினைத்துச் சொல்லும் தீர்ப்புக்கள் செல்லாது. அதன்படி நீங்கள் இந்த இளைஞனுக்கு தண்டனை கொடுக்க முடியாது. அது முற்றிலும் தவறு!" என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தான்.

உடனேயே அந்தப் புதியவனுடன் வந்தவர்களும் சேர்ந்து, "ஆம், அது முற்றிலும் தவறு, தவறு, தவறு!" என்று கோஷமிட்டார்கள். அதைக் கேட்ட வீரர் தலைவன் இத்தனை பேர் எதிர்க்கையில் தான் என்ன செய்யலாம் என  யோசித்த வண்ணம் மௌனமாகச் சிறிது நேரம் இருந்தான். பின்னர் அந்தப் புதியவனிடம் அவன் சொல்லுவதைத் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிவிட்டு உத்திரத்தின் மேல் கட்டிய சுருக்குக் கயிறைத் தன் வாளாலேயே அறுத்துத் தள்ளினான். பின்னர் அந்தப் பெண் இருக்கும் அறைக்குச் சமீபமாகக் கூடத்தின் ஓர் ஓரமாகப் போய் நின்று விட்டான்.  அப்போது வாசலில் யாரோ கைகளைத் தட்டும் சப்தம் கேட்கவே அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். வந்தவன் காலதத்தன். வல்லபனுக்கு மகிழ்ச்சி பொங்கி வர உடனே எழுந்து சென்று காலதத்தனைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான். இங்கே நடந்ததை எல்லாம் அவனிடம் சொல்லித் தான் மிகக் கடுமையானதொரு தண்டனையிலிருந்து தப்பி இருப்பதையும் சொல்லிக் காலதத்தன் எங்கே போனான், என்னவானான் என்று கேட்டான்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்ப்பதுபோலுள்ளது. தொடர்ந்து வாசிக்கிறேன்.