எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 19, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகிய மணவாளத்தில்!

ஊரில் உள்ள அனைவர் வீடுகளுக்கும் சென்று கதவைத் தட்டி உடனே காலி செய்து கொண்டு போகும்படி அறிவுறுத்தினார்கள் சிங்கப்பிரானின் ஆட்கள். எல்லோரும் காரணம் புரியாமல் திகைத்ததற்கு சுல்தானியப் படைகள் அழகிய மணவாளத்தை நோக்கி வருவதைத் தெரிவித்தார்கள். ஊரில் ஒரு சின்னக் குழந்தை கூட இருக்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது. ஊர் மக்கள் முதலில் திகைத்துச் செய்வதறியாமல் நின்றாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய முக்கியமான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக வெளியேற ஆரம்பித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்கள் குடும்பங்களோடு வெளியேறினார்கள். வயோதிகர்கள் தட்டுத் தடுமாறிக்கொண்டும் குழந்தைகள் அரைத்தூக்கத்திலும் அழைத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் அவரவர் குடும்பத்து ஆண் மக்களோடு ஒட்டிக் கொண்டு திகிலுடனும் பயத்துடனும் சென்றனர். சில முகத்தையும் மறைத்துக் கொண்டார்கள்.

வழியில் எங்காவது எதிரிகள் எதிர்ப்பட்டால் என்ன செய்வது என்னும் பயமும் அதிகரித்தது. அவர்கள் எந்தத் திக்கில் இருந்து வருகின்றார்களோ அதற்கு எதிர்த் திக்கில் அனைவரும் சென்றனர்.  சிங்கப்பிரான் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். கூடியவரை வடகிழக்குத் திசையில் சென்றார்கள். நடுவில் வந்த மணவாள ஓடையை மார்பளவு தண்ணீரில் அனைவரும் கடந்தனர். குழந்தைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டனர். சாமான்கள் பலவும் வீணாகிப் போயின! உயிர் பிழைத்தால் போதும் என்னும் எண்ணமே மேலோங்கி இருந்தது. உடைகள் ஈரமாக ஆனதால் அனைவருக்கும் நடப்பதும் சிரமத்தைக் கொடுத்தது. நடை தடுக்கியது. ஆனால் குலசேகரனும், சிஙக்ப்பிரானும் அனைவரையும் அவசரப்படுத்தினார்கள். கிழக்கே சில காத தூரத்தில் சம்புவராயரின் சீமையை சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அங்கே சென்று விட்டால் ஆபத்து இல்லை என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அவனும் சுல்தானியருக்குக் கப்பம் கட்டி வந்தான். எனினும் ஆபத்து அதிகம் இருக்காது என்பது சிங்கப்பிரானின் கருத்து.

சம்புவராயரின் ராஜ்ஜிய எல்லைக்குள் போனதும் அனைவரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களுக்குச் செல்லுமாறு சிங்கப்பிரான் உத்தரவிட்டார். விடிய விடிய அனைவரும் அங்கே சென்று சேர்ந்தார்கள். முன் சொன்னபடி சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களை நோக்கிச் சென்றனர். அதுவரை அவர்களுடன் வந்த ஹேமலேகாவும் இப்போது பிரிந்து சென்றாள். ஹேமலேகாவைப் பிரிகிறோம் என்னும் எண்ணம் குலசேகரனை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் வேறு வழி தான் என்ன! இப்போது சிங்கப்பிரானும் குலசேகரனைப் பிரிந்து செல்ல ஆயத்தமானார். குலசேகரனை திருவண்ணாமலைக்குச் செய்தி சொல்ல அனுப்பிவிட்டுத் தான்  அங்கேயே இருந்து கண்ணனூரில் நடைபெறுவதை வேவு பார்த்து அறிந்து அதற்கேற்றாற்போல் ஶ்ரீரங்கத்தை மீட்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே குலசேகரனிடம் விடை பெற்றார். ஆனால் குலசேகரனோ என்னதான் சம்புவராயரின் எல்லைக்குள் சிங்கப்பிரான் இருந்தாலும் எதிரிகளுக்கு அவர் இங்கே இருப்பது தெரிந்தால் அவர் உயிருக்கே ஆபத்து என அஞ்சினான். அதை அவரிடம் சொல்லவும் செய்தான்.

ஆனால் அவரோ வேறெங்கும் செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. இந்தக் காவிரி நதி தீரத்திலேயே தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் திருவரங்கத்தைத் தொட்டுக்கொண்டு கிழக்கே ஓடிவரும் காவிரியைப் பார்த்துத் தன் மனதை ஆற்றிக்கொள்ளப் போவதாகவும் அப்படியே கண்ணனூரில் நடக்கும் விஷயங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்ள இங்கே தங்குவதே வசதி எனவும் சொன்னார். நல்லகாலம் ஒன்று பிறக்காமலா போய்விடும்! அப்போது ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அழகிய மணவாள மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து மீண்டும் அங்கே கொண்டு செல்லவேண்டும் என்னும் ஆசையும் இருப்பதாய்ச் சொன்னார்.  நம்பிக்கையின் அடிப்படையிலேயே தான் இதை எல்லாம் செய்வதாகவும் சொன்னார். குலசேகரன் இதற்கெல்லாம் தயங்காமல் நாட்டின் விடுதலையை மட்டுமே நினைத்துக் கொண்டு ஹொய்சள மன்னரைக் கண்டு மதுரைப்படைகள் படை எடுத்து வரும் விபரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கண்ணனூருக்கு வந்து படைகள் தங்கி இருப்பது கிளம்பிச் செல்லும் முன்னர் அவன் அங்கே சென்று சேர்ந்து செய்தியை ஹொய்சள மன்னரிடம் சொல்லவேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே விரைவில் திருவண்ணாமலையை நோக்கிச் செல்லுமாறு குலசேகரனைப் பணித்தார்.

1 comment:

நெல்லைத்தமிழன் said...

படிக்கும்போதே பகீர்னு இருக்கு. இப்போ மாதிரி தகவல் தொடர்பு இல்லாமல், இந்தத் திசையில் போனால் பாதுகாப்பு என்று எண்ணுவதே ஒரு அனுமானம்தானே.. அந்த இருண்ட காலத்தை நினைப்பதற்கே அச்சமாக இருக்கு.

நல்ல நடைல எழுதுறீங்க. சீக்கிரம் சீக்கிரம்...