எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, December 23, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரனின் தடுமாற்றம்!

சிங்கப்பிரானின் வார்த்தைகளைக் கேட்ட குலசேகரன் உடனடியாகத் திருவண்ணாமலை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இம்முறை துருக்கப்படைகள் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக மாறு வேஷம் தரித்துக் கொண்டான். ஓர் பைராகி போல வேடம் தரித்துக் கொண்ட அவன் நடந்தே தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஆரம்பத்தில் சிறிது தூரம் இவ்வாறு சென்றவன் வீதியில் ஆங்காங்கே சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும், கலகலப்புடனும் இளம்பெண்களும் நடுத்தர வயதுப் பெண்களும் நீர் சுமந்து கொண்டு செல்வதைக் கண்டு இம்மாதிரி நிலைமை யைத் திருவரங்கம் காண்பது எப்போது என ஏங்கினான். சற்று நேரம் அவர்களையே தொடர்ந்த அவன் பார்வை பின்னர் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் போகலாம் என அருகில் நீர் குடிக்கக் குளம் இருக்கா எனத் தேடியது. குளம் ஒன்றைக் கண்டதும் அங்கே சென்று தாகசாந்தி செய்து கொண்டான்.

குளத்தில் கீழே இறங்க நிறையப் படிகள் இருப்பதையும் பெண்கள் படியிலே நின்று கொண்டே குடத்தை நீரில் முக்கி நீரைக் குனிந்து எடுத்ததையும் கண்டான். அதில் ஓர் பெண் குலசேகரன் வருவதைக் கண்டதும் வெட்கத்துடன் ஒதுங்குகையில் கையிலிருந்து குடம் கீழே விழுந்து படிகளில் டமடமவென சப்தம் செய்து கொண்டு போனது. அதைக் கேட்டுக் கொண்டு நின்ற குலசேகரனிடம் அங்கிருந்த ஒருவர் இது மாதிரிக் குளத்துப் படிகளில் குடம் விழுந்த "டம்டம்" சப்தத்தை வைத்துக் காளிதாசன் எழுதிய கவிதையை நினைவு கூர்ந்தார். அவர் பேச்சைக் கேட்டக் குலசேகரன் வியந்து நின்றான். இங்கே நாம் பார்த்த காட்சி இது தானே! காளிதாசன் போஜராஜன் கூறிய டம்டம் என்னும் சப்தத்தை வைத்தே இந்த நிகழ்ச்சியைக் கண்கள் முன்னால் கவிதையாகக் கொண்டு வந்துவிட்டானே! என ரசனையுடன் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்து குளத்துக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். அவருடைய வர்ணனையைக் கேட்ட குலசேகரன் இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டே அவருக்கு இவ்வளவு வடமொழி ஞானம் இருப்பதை வியந்து கூறினான். அதற்கு அவர் தான் ஹேமலேகா என்னும் வித்வாம்சினியிடம் இதை எல்லாம் கற்றதாகவும், தான் ஒரு சாதாரணச் சின்னக் கவி எனவும் ஹேமலேகாவைப் போல் புலமை வாய்ந்தவன் இல்லை எனவும் கூறினார்.  அவளிடம் கல்வி கற்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். குலசேகரன் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டுத் தன் வழியே கிளம்பினான். ஆனாலும் அந்தக் கவிஞரின் வார்த்தைகளிலேயே அவன் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஹேமலேகாவைப் பற்றி நினைக்கையிலேயே அவன் மனம் நெகிழ்ச்சியுற்றது. எப்பேர்ப்பட்ட பெண் அவள்! அவள் புலமை தான் எம்மாத்திரம்! நானும் இந்தச் சண்டை, பூசல் எதுவும் இல்லாமல் அவளிடம் பாடம் கேட்டுக் கொண்டும்  கவிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்திருக்க வேண்டும். என நினைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.

அப்போது அவன் மனம் திடீரென அவனை ஹேமலேகாவைக் காண உடனே செல் என உத்தரவிட்டது. நேற்று சம்புவராயர் எல்லையில் பிரியும்போது கூட அவளிடம் சரியாக விடைபெறவில்லை. இப்போது உடனே அவளைத் தேடிப் போ என்றது அவன் மனம். செய்வதறியாது திகைத்த குலசேகரன் கடைசியில் தன் மனம்  தன்னை வெல்ல ஹேமலேகா எங்கே இருக்கிறாள் எனக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினான். ஹேமலேகாவின் கவிதைகளைக் கேட்பதிலும் அவளுடன் உரையாடுவதிலும் உள்ள சுகத்தை நினைத்து அவன் மனம் உடனே அவளைக் காண விழைய இங்கே ஒரு முக்கியமான அவசரமான ராஜாங்கக் காரியம் தாமதமும் ஆனதோடு அல்லாமல் பாழாகவும் போகும் போல் இருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட குலசேகரன் அறிவுக்கு இதெல்லாம் எட்டவில்லை. அவன் ஹேமலேகாவைத் தேடித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

அதற்குள்ளாக அங்கே அழகிய மணவாளம் கிராமத்தை சுல்தான்களின் வீரர்கள் சூழ்ந்து கொண்டு குலசேகரனைத் தேடினார்கள். ஊரே வெறிச்சென இருக்கக் கண்டார்கள். அங்கே யாருமே இல்லை என்பது அவர்களுக்கு ஆத்திரத்தை அதிகம் ஆக்க அவர்கள் ஊரையே எரித்தனர். அனைத்து வீடுகளும், விளை நிலங்களும் பாழாகிப் போயின. குளங்கள் வெட்டப்பட்டு நீரெல்லாம் வெளியேறியது. மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஊரே பற்றி எரிந்தது.

1 comment:

நெல்லைத்தமிழன் said...

வரலாற்று உண்மை என்றாலும் படிக்கும்போது மனம் கொதிப்படைகிறது.